முள்ளியவளையில் சுகாதார சீர்கேடு காரணமாக பிரபல உணவகம் சீல்

முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட முள்ளியவளை பகுதியில், சுகாதார சீர்கேட்டுடன் இயங்கியதாக கண்டறியப்பட்ட பிரபல உணவகம் ஒன்று பொது சுகாதார பரிசோதகர்களின் அதிரடி நடவடிக்கையில் சீல் வைக்கப்பட்டுள்ளது.

முள்ளியவளை சந்தைக்கு அருகில் அமைந்துள்ள குறித்த உணவகம், சுகாதார விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக தெரியவந்ததைத் தொடர்ந்து தண்ணீரூற்று பொது சுகாதார பரிசோதகர் கஜலவனால் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், குறித்த உணவகத்திற்கு ரூ.20,000 அபராதம் விதித்ததுடன், உணவகத்தை சீல் வைக்கவும் உத்தரவிட்டது.

அதன்பேரில், தண்ணீரூற்று பொது சுகாதார பரிசோதகர் கஜலவன் மற்றும் முல்லைத்தீவு பொது சுகாதார பரிசோதகர் பிரவீன் ஆகியோர் இணைந்து நேற்று (03) குறித்த உணவகத்தை சீல் வைத்தனர்.

பொது சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத விற்பனை நிலையங்களுக்கு எதிராக எதிர்காலத்திலும் திடீர் சோதனைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் தொடரும் என பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply