சுழிபுரம் பறாளை விநாயகர் ஆலய வளாகத்தில் பௌத்த பூசை வழிபாடுகள்

யாழ்ப்பாணம், மார்ச் 16

யாழ்.சுழிபுரம் பறாளாய் விநாயகர் ஆலய வளாகத்தில் உள்ள அரச மரத்தடியில் பௌத்த பிக்குகள் பூஜை வழிபாடு மற்றும் பிரித் ஓதுவதற்கு முனைப்புக் காட்டி வருகின்றனர்.

இதைத் தடுத்து நிறுத்துவதற்கு அரசியல்வாதிகளும் பிரதேச மக்களும் முன்வரவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  ஈழத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் பறாளாய் விநாயகர் ஆலயமும் ஒன்று. இந்த ஆலயத்திற்கு அருகே முருகன் ஆலயமும் உண்டு.

இந்த ஆலய வளாகத்தில் உயரமாக வளர்ந்த அரச மரம் காணப்படுகின்றது. அண்மைக் காலமாக வழிபாடு என்ற போர்வையில் படையினரின் உதவியுடன்  பௌத்த பிக்குகள் அடிக்கடி இந்த ஆலயத்திற்கு வந்து சென்றனர். இதையடுத்து நாளை (17) பௌர்ணமி தினத்தன்று இங்குள்ள அரச மரத்தடியில்  படையினரின் உதவியுடன் பிக்குகள் பூஜை வழிபாடுகளை மேற்கொள்ள முனைப்புக் காட்டியுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக ஆலய நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கும் பௌத்த பிக்குகள் தெரியப்படுத்தி உள்ளனர் எனக் கூறப்படுகின்றது.  பிக்குகளின் மேற்படி நடவடிக்கையை தடுத்து நிறுத்தி பறாளாய் விநாயகர் முருகன் ஆலயங்களை ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து பாதுகாப்பதற்காக  இன்று (16) புதன்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு ஆலய வளாகத்தில் பொதுக் கலந்துரையாடல் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலில் எவரும் கலந்துகொண்டு ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *