இதுவரை 3 மில்லியனுக்கும் அதிகமானோர் உக்ரேனிலிருந்து வெளியேறியுள்ளனர்!

உக்ரேனில் போர் மூண்ட சுமார் 3 வார காலத்தில், 3 மில்லியனுக்கும் அதிகமானோர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபை இதுகுறித்த தகவலினை வெளியிட்டுள்ளது.

உக்ரேனிலிருந்து சுமார் 4 மில்லியன் பேர் வரை வெளியேறுவர் என்ற அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபை அதன் உதவித் திட்டங்களை வகுத்துள்ளது.

எனினும், தற்போது அகதிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை யாவோரிவ் இராணுவத்தளம் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்தே உக்ரேனின் மேற்குப் பகுதியிலிருந்தும் இப்போது மக்கள் வெளியேற ஆரம்பித்துள்ளனர்.

குறித்த தாக்குதல் நடாத்தப்படும் வரை அந்தப் பகுதி பாதுகாப்பானதாகக் கருதப்பட்டது.

இதேவேளை, உக்ரேனிய அகதிகளில் பெரும்பாலானோர் போலந்து, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றுள்ளனர்.

அவர்களில் 1.8 மில்லியன் பேர் போலந்தில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

Leave a Reply