நாமல் யாழிற்கு விஜயம் – அபிவிருத்தி திட்டங்களை நேரில் சென்று ஆய்வு

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ யாழ்ப்பாண மாவட்டத்திற்கான கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

இன்று (வியாழக்கிழமை) மதியம் சென் பொஸ்கோ பாடசாலை அருகில் புனரமைக்கப்பட்டுவரும் குளம், ஐ திட்ட வீதியையும் ஆஸ்பத்திரி வீதியில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டம், யாழ்.மாநகர சபை புதிய கட்டடம் என்பவற்றை பார்வையிட்டார்.

அத்தோடு, அரசாங்கத்தின் அனுசரணையில் யாழில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்களை நேரில் கண்காணித்து அவற்றை துரிதப்படுத்தும் நோக்கிலேயே அவரது விஜயம் அமைந்திருந்தது.

இதன் போது யாழ்மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன், பிரதமரின் இணைப்புச் செயலாளர் கீத்நாத் காசிலிங்கம் , யாழ். மாநகர மேயர் மணிவண்ணன், யாழ்ப்பாண பிரதேச செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் இந்த விஜயத்தின்போது, பாசையூரில் நடைபெறும் அபிவிருத்தி திட்டங்கள், விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் புனரமைக்கப்படவுள்ள நல்லூர் கலைமகள் விளையாட்டு மைதானம், பல்பரிமாண நகர திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட உள்ள மருதனார்மடம், மத்திய கல்வி அமைச்சின் கீழ் இடம்பெற்று வருகின்ற தெல்லிப்பளை அருணோதயா பாடசாலைக் கட்டடம், வறுத்தலைவிளானில் காணியற்ற குடும்பங்கள் ஆகியவற்றின் அபிவிருத்தி திட்டங்கள், நாவற்குழியில் யாழ்ப்பாண – கிளிநொச்சி நீர் விநியோக திட்டத்தையும்
நாமல் பார்வையிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *