16 இலட்சம் பெறுமதியான வைத்திய உபகரணங்கள் வழங்கி வைப்பு- கிண்ணியா

16 இலட்சம் பெறுமதியான வைத்திய உபகரணங்களை முஸ்லிம் எய்ட் கிண்ணியா தள வைத்தியசாலைக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கிண்ணியா ஆதார வைத்தியசாலையின் கொவிட் 19 விசேட சிகிச்சைப் பிரிவிற்கு 16 இலட்சம் ரூபா பெறுமதியான அவசர சிகிச்சை உபகரணங்களை இன்று(9) முஸ்லிம் எய்ட் நிறுவனம் கிண்ணியா தள வைத்தியசாலையின் பணிப்பாளர் ஐ.எம்.ஜவாஹீர் அவர்களிடம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் வைத்தியர்கள், தாதிமார், முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

திருகோணமலை மாவட்டத்தில் சனத்தொகை அதிகமாக உள்ள பிரதேசமாக கிண்ணியாக அமைவதுடன் அண்மையில் அதிகமான மக்கள் கொவிட் தாக்கத்திற்குள்ள உள்ளானார்கள்.

மேலும், கிண்ணியாவிற்கு அண்மைய பிரதேசங்களான மூதூர், தம்பலகமம், முள்ளிப்பொத்தானை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த கொவிட் தொற்று நோயாளர்களுக்கும் இங்கு அவசர சிகிச்சை அளிக்கப்படுகின்றது.

கொவிட் சிகிச்சைக்கென விரிவாக்கப்பட்டுள்ள புதிய பிரிவிற்கு பல்வேறு வைத்திய உபகரணங்கள் அவசரமாக தேவைப்பட்ட நிலையில், வைத்தியசாலை நிர்வாகத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கையினை அடுத்து முஸ்லிம் எய்ட் நிறுவனம் இம் மருத்துவ உபகரணங்களைப் பெற்றுக் கொடுத்துள்ளது.

கொவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து அவர்களின் உயிர்களைப் பாதுகாக்க உதவும் வகையில் மீண்டும் இம் மருத்துவ உபகரணங்களை வழங்கியுள்ளது. ஓட்சிசன் வழங்கும் உயர் உபகரணம், பல்டிபாரா மொனிடர் மற்றும் 10 பல்ஸ் ஒட்சிமீட்டர் என்பன இவ் உபகரணத் தொகுதியில் அடங்கும்

தொற்று நோய் பரவலைத் தடுத்தல் மற்றும் சிகிச்சையளித்தலுக்கு உதவுதல் ஆகிய மனிதநேய பணிகளின் ஒரு பகுதியாக முஸ்லிம் எய்ட் நிறுவனம் இலங்கை முழுவதும் கொவிட் -19 நோய்த்தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *