முன்னாள் முதலமைச்சரும் நீதியரசருமான விக்னேஸ்வரன் அவர்கள் ஐநா மனித உரிமை ஆணையருக்கு அனுப்பியுள்ள அவசர மேலதிக கடிதம் ஒன்றில், இலங்கையில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்தும் தமிழர்களுக்கு எதிராக சித்திரவதையையும் பாலியல் வல்லுறவையும் பயன்படுத்தி வருவதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், ஐநா சித்திரவதைக்குள்ளானவர்களை சந்தித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டியதுடன், அவர்களை கொளரவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவர் மேலும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,
“தொடரும் சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறை” என்று தலைப்பிடப்பட்டு எழுதப்பட்ட அந்த கடித்த்தின் சாராம்சம் வருமாறு;
“செப்ரெம்பர் 8, 2021 தேதியிட்ட எனது கடிதத்திற்கான இணைப்பு
8 செப்டம்பர் 2021 அன்று ஐநாவுக்கு அனுப்பப்பட்ட எனது கடிதம் அவசரமாக எழுதப்பட்டது என்பதால் எல்லா விடயங்களையும் குறிப்பிட முடியவில்லை. நேரம் குறைவாக இருந்தாலும், ஒரு முக்கியமான விடயத்தை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக இந்த மேலதிக கடித்த்தை எழுதுகிறேன். இது அவசரமாக தயாரிக்கப்பட்ட எனது முந்தய கடிதத்தில் தவறவிடப்பட்டதுக்கு வருந்துகிறேன்.
எனது முந்தைய கடிதத்தில் ஒரு இணைப்பாக இந்த பகுதியை சேர்க்கிறேன்.
இலங்கையில் காவல்துறை மற்றும் இராணுவம் தொடர்ந்து தமிழ் இளைஞர்களை சித்திரவதை செய்துவருவதற்கான அதிக ஆதாரங்கள் உள்ளன.
தமிழ் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டு துன்புறுத்தப்படுகிறார்கள். சமீபத்திய நாட்களில் சமூக ஊடகங்களில் அவர்கள் தாக்கப்பட்டதையும் அவர்கள் காயங்களை தாங்கியதையும் புகைப்படங்கள் வெளிவந்துள்ளன. நான் முன்பு கூறியது போல் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் (ITJP) சித்திரவதை செய்யப்பட்டவர்களை விசாரணை செய்து, ஆதாரங்களை ஆவணப்படுத்தி வருகிறது.
அவர்களால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் நடைபெற்றுவரும் சித்திரவதைகளின் கொடூரமான விவரங்கள் விபரிக்கப்பட்டுள்ளன. இலங்கை பாதுகாப்பு படையி்ன் தடுப்புக்காவலில் உள்ள இந்த இளைஞர்களுக்கே இந்த சித்திரவதைகள் நடக்கின்றன.
ஒவ்வொரு முறையும் இத்தகைய தகவலைப் பெறும் போது ஐநா செய்வதெல்லாம், சித்திரவதையை பற்றி விசாரிக்கவோ அல்லது நடவடிக்கை எடுக்கவோ இல்லாமல், ஒவ்வொரு ஆண்டும் தமது அறிக்கையில் சுருக்கமாக குறிப்பிடுவதோடு மட்டும் நிறுத்திவிடுகிறார்கள் என்பதை நான் மிகவும் மரியாதையுடனும் வருந்தத்துடனும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்த பிரச்சினையை பற்றி OHCHR தைரியமாகப் பேசுவதற்கும் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து அவர்களை, கொளரவிப்பதற்குமான நேரம் வந்துவிட்டது” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.