சந்திமாலின் போராட்டம் வீண்: தென்னாபிரிக்காவிடம் வீழ்ந்தது இலங்கை அணி!

இலங்கை அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி 28 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், 1-0 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா அணி முன்னிலைப் பெற்றுள்ளது.

கொழும்பு- ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக ஹெய்டன் மார்க்கம் 48 ஓட்டங்களையும் ரீஸா ஹென்ரிக்ஸ் 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுகளையும் சமீர, தீக்ஷன மற்றும் தசுன் சானக ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 164 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இலங்கை அணியால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் தென்னாபிரிக்கா அணி 28 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, தினேஷ் சந்திமால் ஆட்டமிழக்காது 66 ஓட்டங்களையும் சமிக கருணாரத்ன ஆட்டமிழக்காது 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், போர்ச்சுன், நோட்ஜே, மஹாராஜ், சம்ஸி மற்றும் பிரிடோரியஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 33 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 1 பவுண்ரி அடங்களாக 48 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஹெய்டன் மார்க்கம் தெரிவுசெய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *