பிறந்து 8 நாட்களேயான குழந்தைக்கு கொரோனா தொற்று

திருகோணமலை – மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட பிறந்து 8 நாட்களேயான குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

மஹதிவுல்வெவ-தெவனிபியவர பகுதியில் வசித்து வரும் 23 வயதுடைய பெண்ணின் குழந்தை காய்ச்சல் காரணமாக இன்று சனிக்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

எனினும் இந்நிலையில் அங்கு மேற்கொள்ளப்பட்ட ரெபிட் அண்டிஜன் பரிசோதனை மூலம் இந்த குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் இதனையடுத்து அந்த குழந்தையின் தாய்க்கு மேற்கொள்ளப்பட்ட ரெபிட் அண்டிஜன் பரிசோதனையில் அவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, குறித்த தாயார் வசித்து வந்த மூன்று குடும்பங்களைச் சேர்ந்தவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தொடர்ந்தும் அவரது குடும்பத்தினருக்கு பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் பொதுச் சுகாதார பரிசோதகர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *