பொருளாதார வீழ்ச்சியை தவிர்க்க இலாகாவை மாற்றுவது தீர்வாகாது – மைத்திரிபால

ஒருவரை மாற்றுவதன் மூலம் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சரிசெய்ய முடியாது என நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

நீண்ட கால கொள்கைத்திட்டம் செயற்படுத்தப்பட்டால் மாத்திரமே நாட்டை முன்னேற்ற முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர், மத்திய வங்கியின் ஆளுநர் நியமனம் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்கு பொருளாதார நிபுணத்துவம் கொண்டவர்கள் நியமிக்கப்படுவதன் காரணமாக அந்த நியமனம் குறித்து மாற்று கருத்துகளை குறிப்பிட முடியாது.

பல்வேறு காரணிகளினால் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளன. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலைமைக்கு அமைய பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை ஓரிரு நாட்களில் சீர் செய்ய முடியாது.

நீண்டகால கொள்கை திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட தேசிய செயற்திட்டம் வகுக்கப்பட வேண்டும். பொருளாதாரம், சுகாதாரம், அரசியல் என அனைத்து துறைகளையும் உள்ளிடக்கிய வகையில் பலமான கொள்கை வகுக்கப்பட வேண்டும்.

பொருளாதார கொள்கை ஆட்சிமாற்றத்திற்கு அமைய மாற்றமடைவதால் சிறந்த முன்னேற்றத்தை அடைய முடியாதுள்ளது. நிலையாக கொள்கை திட்டம் வகுக்காமல் நாட்டை ஒருபோதும் முன்னேற்றமுடியாது” என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *