
சட்டம், நீதித்துறையின் தாமதத்தால் கைதிகளுக்கான தீர்வு தூரமாகிவிட்டது! குரலற்றவர்களின் குரல் அமைப்பு சிறைக்கைதிகள் தினத்தில் சுட்டிக்காட்டு
வளப்பற்றாக்குறைகளை கோடிட்டுக்காட்டிக்கொண்டிருக்கும் சட்டம் மற்றும் நீதித்துறை என்பனவற்றின் தாமதம் காரணமாக, கைதிகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பது இன்னும் தூரமாகவே உள்ளது. எனவே, அரசியல் கைதிகளை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும், என்று சிறைக்கைதிகள் தினத்தில் கோரிக்கை விடுக்கின்றோம் என்று ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்த அமைப்பு விடுத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-
நாட்டிலுள்ள 26 சிறைச்சாலைகளில் சுமார் 20ஆயிரத்து 228 கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள். உண்மையில் நாட்டினுடைய சிறைக்கட்டமைப்பின் பிரகாரம் சுமார் 12 ஆயிரம் கைதிகளை மாத்திரமே தடுத்து வைத்துப் பராமரிக்க முடியும் என சிறைத்துறை தலைமையகம் தெரிவிக்கின்றது. நாட்டுக்குள் அன்றாடம் அதிகரித்துச்செல்கின்ற குற்றச்செயல்கள் காரணமாகவே சிறைக்கூடங்கள் நிரம்புகின்றன என்றுகூறிவிட்டு வெறுமனே ஒதுங்கிவிட முடியாது.
சட்டத்துறை காரியாலயத்திலும் நீதிமன்றங்களிலும் வழக்குக்கோவைகள் குவிந்து கிடக்கின்றன. வழக்கு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படுமென நீதி அமைச்சு தெரிவித்து வருகின்றபோதிலும் பெரும்பாலான வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்படாமல் நீண்டகால தவணைத்திகதியிடப்பட்டு வருவதையே அவதானிக்க முடிகிறது. விசேடமாக இரண்டு தசாப்த காலங்களுக்கும் மேலாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.
கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக நீதிமன்ற நடவடிக்கைகள் சீரான முறையில் இயங்கமுடியாத நிலை தொடர்கிறது.
சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் தமது சட்டத்தரணிகளை சந்தித்து வழக்கு விடயங்கள் தொடர்பில் பேசமுடியாதுள்ளது.
‘ஸ்கைப்’ தொழிநுட்பத்தின் வழியே நீதிவானூடாக நீதிமன்ற வழக்குகள் இடம்பெற்று வருகின்றன. எனினும், பாதிக்கப்பட்ட தரப்பு நியாயங்களை நேரடியாக மன்றுக்கு எடுத்துக்கூறி முறையிடுவதில் இடையூறுகள் காணப்படுகின்றன.
நடைமுறையிலிருந்துவந்த ‘தண்டனைக்கைதிகளுக்கான வீட்டு விடுப்பு’ (Home leave) வழங்கும் செயற்பாடானது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
பல்வேறு சமூக பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துவரும் தமது அன்புக்குரிய உறவுகளைப் பார்த்துப்பேசுவதற்கு கைதிகளால் இயலாதுள்ளது.
ஊட்டச்சத்துடன் கூடிய போசாக்கான உணவு, போதுமான மருத்துவ வசதி மற்றும் அத்தியாவசியத்தேவைகளை ஈடுசெய்ய முடியாமல் கைதிகள் விரக்தியடைந்துள்ளார்கள்.
இவ்வாறான விடயங்களால் சிறைத்தடுப்பில் உள்ளவர்கள் இயல்புக்கு மாறான உடல், உள நெருக்கீடுகளுக்கு உள்ளாகி வருகின்றனர் என்று கைதிகளின் பெற்றோர்கள், உறவினர்கள் கவலை கொண்டுள்ளனர்.
தொடர் மன அழுத்தமானது வன்முறை, போதைக்கு அடிமைப்படுதல், தற்கொலை எண்ணம் போன்ற விபரீத நிலைக்கு கைதிகளை இட்டுச்செல்லும் அபாயம் ஏற்படலாம். ‘கைதிகளும் மனிதர்களே’ என்பதற்கமைய அவர்களது வாழ்வுரிமையை உறுதிப்படுத்த வேண்டியது அரசின் தலையாய கடமையாகிறது. என்பதை தேசிய சிறைக்கைதிகள் தினத்தில் நினைவூட்டுகின்றோம். – என்றுள்ளது.