தமிழக அரசு வழங்கும் நிவாரணப் பொருட்கள் இலங்கையிடம் ஒப்படைக்கப்படும்: மத்திய அரசு

சென்னை,மே 02

தமிழக அரசு வழங்கும் நிவாரணப் பொருட்கள் இலங்கையிடம் ஒப்படைக்கப்படும் என வெளியுறவுத்தறை அமைச்சர் ஜெய்சங்கர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்திய பிரதமருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில்,

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, இலட்சக்கணக்கான மக்கள் துன்பத்திற்கும், துயரத்திற்கும் ஆளாகியுள்ளனர் என்றும், ஒவ்வொரு நாளும் அங்கு நிலைமை மோசமடைந்து வருவதாகவும் குறிப்பிட்டு, அங்குள்ள மக்களுக்கு உருவாகி வரும் தீவிர நெருக்கடிக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டுமென்று தெரிவித்திருந்தார்.

உயிர் காக்கும் மருந்துகளையும் உடனடியாக இலங்கைக்கு அனுப்பிட தேவையான ஏற்பாடுகளைச் செய்து, உரிய அனுமதிகளை ஒன்றிய அரசு வழங்கிட வேண்டுமென்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றியுள்ள விபரத்தை தனது கடிதத்தில் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், தமிழக அரசு வழங்கும் நிவாரணப் பொருட்கள் இலங்கையிடம் ஒப்படைக்கப்படும் என வெளியுறவுத்தறை அமைச்சர் ஜெய்சங்கர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய பதில் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சர் ஜெய்சங்கர் எழுதியுள்ள கடிதத்தில்,

இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்க அனுமதி அளிக்கப்படுவதாகவும், பொருட்களை மத்திய அரசு மூலம் அனுப்பலாம். கொழும்பில் உள்ள இந்திய உயர்மட்ட ஆணையத்தின் மூலம் இலங்கை அரசுடன் தொடர்பில் இருந்து வருகிறோம். நமது அரசு அளிக்கும் நிவாரணங்களை பெற்றுக்கொள்வதற்கு இலங்கை அரசு தயாராக உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனால், தமிழக அரசு விரும்பினால் இலங்கையில் பொருட்களை விநியோகம் செய்யும் பணிகளை ஒருங்கிணைக்க தலைமைச் செயலாளரை அனுப்பி வைக்கலாம் என்றும் ஜெய்சங்கர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *