எமது போராட்டத்தை அழிப்பதற்கு உதவிய இந்திய அமெரிக்க நாடுகளுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தும் போது, ஏன் காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடும் சிங்கள இளைஞர்களுக்கு நாங்கள் ஆதரவளிக்கக் கூடாது என இங்கே ஒரு சிலர் பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நான் ஒன்றை கேட்க விரும்புகின்றேன். 30 வருட காலமாக இடம்பெற்ற போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமெரிக்காவும் இந்தியாவும் தான் இலங்கை அரசாங்கத்திற்கு ஆயுத உதவியை வழங்கி இருந்தார்கள்.
ஆனால் நாங்கள் அவர்களுடன் தானே சந்திப்புக்களை மேற்கொண்டு நமக்கு தீர்வுகளைப் பெற்றுத் தருமாறு கூறுகின்றோம்.
அவ்வாறான நிலையில் காலிமுகத்திடலில் ஈடுபடும் போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு தமது ஆதரவினை வழங்க கூடாது என கேள்வி கேட்க விரும்புகின்றேன்.
இங்கே ஒரு சிலர் கேட்கிறார்கள், நாம் போராட்டத்தை மேற்கொண்ட போது எமக்கு ஆதரவளிக்காதவர்களுக்கு நாங்கள் ஏன் ஆதரவளிக்க வேண்டுமென. அவ்வாறு இருக்க முடியாது எமக்கு கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை நாங்கள் பயன்படுத்த வேண்டும்.
எமது போராட்டம் இடம்பெற்றபோது தென்னிலங்கையைச் சேர்ந்த சிலர் எமக்கு ஆதரவாக பேசி இருந்தார்கள் அவர்களில் சிலரின் பெயரைக்கூட குறிப்பிட முடியும்.
அவ்வாறான நிலையில் தற்போது ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழராகிய நாம் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

