நோன்புப் பெருநாளை கொண்டாட தயாராகும் மக்கள்

திருகோணமலை – தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் நாளை செவ்வாய்கிழமை புனித நோன்புப் பெருநாளை கொண்டாடுவதற்கு தயாராகிவருகின்றனர்.

அந்த வகையில் 30 நாட்கள் தாகித்திருந்து, பசித்திருந்து கொண்டாடும் இவ் நோன்புப் பெருநாளை குடும்பத்தோடும், அயலவர்களோடு இனிப்புப் பண்டங்களை பகிர்ந்து கொண்டாடுவதற்காக தங்கள் தங்கள் வீடுகளில் இனிப்புப் பண்டங்களை தயார்படுத்திவருகின்றனர்.

தற்போது நாட்டில் அத்தியவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் திருகோணமலை – தோப்பூர் பகுதி மக்கள் நோன்புப் பெருநாளை சிக்கனமாக கொண்டாடுவதற்காக தயாராகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் இம்முறை ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடுவதற்கு மக்கள் தயாராகி வருகின்றனர்.

மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களில் உள்ள முஸ்லிம் கிராமங்களில் ஜவுளி கடைகளில் மக்கள் முண்டியடித்து பெருநாளை சிறப்பாக கொண்டாடுவதற்கு தேவையான ஆடைகளை கொள்வனவு செய்து வருகின்றனர்.

அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை, மருதமுனை போன்ற பிரதேசங்களில் அதிகளவிலான மக்கள் கடைகளில் நிறைந்து வழிகின்றனர்.

பொருட்களின் அதிக உச்ச விலை ஏற்றத்திற்கு மத்தியிலும் வீடுகளில் பலகாரங்கள் மற்றும் இதர உணவுப் பண்டங்களை தயார் செய்து மக்கள் தமது நோன்புப் பெருநாளை கொண்டாடுவதற்கு தயாராகி வருகின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக மக்கள் தமது நோன்புப் பெருநாள் கொண்டாட்டங்களை குடும்பத்தோடு மாத்திரம் மட்டுப்படுத்தி வீடுகளுக்குள் கொண்டாடி வந்தனர்.

இம்முறை மக்கள் திடல்களிலும் பள்ளிவாசல்களிலும் கூட்டாக இமாம் ஜமாஅத்தோடு பெருநாள் தொழுகையை தொழும் வாய்ப்பு முஸ்லிம் மக்களுக்கு கிடைத்துள்ளது.

இதனால் முஸ்லிம் மக்கள் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமது பெருநாள் தொழுகையை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

Leave a Reply