
பெர்லின், மே 03
இந்தியப் பிரதமர் மோடி ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய 3 நாடுகளில் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதில் முதலாவதாக ஜெர்மனி சென்றுள்ளார்.
தலைநகர் பெர்லினில் உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலையில் இந்தியப் பிரதமர் மோடி போய் சேர்ந்தார். அங்கு வசித்து வரும் இந்தியர்கள் சார்பில் பழமை வாய்ந்த பிராண்டன்பர்க் கேட் பகுதியில் உள்ள ஓட்டலில் பிரமதர் மோடிக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடாகி இருந்தது. இதற்காக அந்த அதிகாலை நேரத்தையும் பொருட்படுத்தாமல் ஏராளமான இந்தியர்கள் அங்கே குவிந்தனர்.
வண்ண உடைகள், பாரம்பரிய ஆடைகள் என நாட்டின் பன்முக கலாசாரத்தை வெளிப்படுத்தும் உடைகளில் வந்திருந்த அவர்களிடம் உற்சாகம் கரைபுரண்டது. பின்னர் பிரதமர் மோடி வந்தவுடன் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். கார்பா மற்றும் பிற இந்திய பாரம்பரிய நடனங்கள் மற்றும் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகளை நடத்தியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் ‘வந்தே மாதரம்’, ‘பாரத் மாத கீ ஜே’ உள்ளிட்ட கோஷங்களையும் எழுப்பி மகிழ்ந்தனர்.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அசுதோஷ் என்ற இந்திய வம்சாவளி சிறுவன், பிரதமர் மோடிக்காக தேசபக்தி பாடல் ஒன்றை பாடினான். அதற்கு, ‘சபாஷ்’ எனக்கூறி பிரதமர் மோடி பாராட்டினார். இதைப்போல மான்யா மிஸ்ரா என்ற சிறுமி பிரதமர் மோடியின் ஓவியத்தை பென்சிலால் வரைந்து அவருக்கு பரிசளித்தார்.
அதை வாங்கிக்கொண்ட பிரதமர் மோடி, அதில் கையெழுத்து போட்டு மீண்டும் சிறுமியிடமே வழங்கினார். மேலும் அவருடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். இவ்வாறு பிரதமர் மோடியுடன் பலரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அவரை நெருக்கமாக சென்று சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததால் பலரும் மகிழ்ச்சியடைந்தனர்.
இதற்காக அதிகாலை 4 மணிக்கே வந்திருந்ததாக ஒருவர் கூறினார். இதைப்போல கடந்த 8 ஆண்டுகளாக நாட்டு மக்களுக்கு ஏராளமான திட்டங்களை வழங்கியிருக்கும் பிரதமர் மோடியை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்ததாக மற்றொருவர் உண்ர்ச்சிவசத்துடன் தெரிவித்தார். இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினரின் இந்த சிறப்பான வரவேற்பு பிரதமர் மோடிக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது.
இதை தனது டுவிட்டரில் அவரும் வெளிப்படுத்தி இருந்தார். அவர் கூறுகையில், ‘பெர்லினில் இது அதிகாலை நேரம். என்றாலும் ஏராளமான இந்தியர்கள் இங்கு வந்துள்ளனர். அவர்களுடன் இணைந்திருப்பது அருமையாக இருந்தது. புலம்பெயர் இந்தியர்களின் சாதனைகளுக்காக இந்தியா பெருமிதம் கொள்கிறது’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதைப்போல, பிரதமர் மோடியை வரவேற்க பிராண்டன்பர்க் கேட் பகுதி விழாக்கோலம் பூண்டிருந்த படங்களை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு இருந்தது. பெர்லினின் சின்னமான பிராண்டன்பர்க் கேட்டில் இந்தியாவின் வண்ணங்களும் பன்முகத்தன்மையும் காட்சிப்படுத்தப்பட்டு இருப்பதாக அதில் குறிப்பிட்டு இருந்தது

