
திருமலை, மே 03
திருகோணமலை-உப்புவெளி-கன்னியா மாங்காய் ஊற்று பகுதியில் திடீரென மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை பாலையூற்று பூம்புகார் பிரதேசத்தில் வசித்துவந்த கே.வசந்தன் (வயது 34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த நபர் நேற்று (02) நண்பகலில் வெயிலில் வேலை செய்து கொண்டிருக்கும்போது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தற்போது சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், குறித்த நபர் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

