மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க இன்றையதினம் “ஊழல் எதிர்ப்பு குரல்” என்ற தலைப்பில் இரகசிய ஆவணங்கள் சிலவற்றை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பை நடாத்தி வருகின்றார்.
இந்நிலையில் பலராலும் எதிர்பார்க்கப்பட்ட அநுரவின் இன்றைய ஊடகசந்திப்பில் பல முக்கிய அரசியல் வாதிகளின் ஊழல்கள் வெளியாகும் என நேற்று முதலே பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
இன்றைய ஊடக சந்திப்பில் அநுர குமார திஸாநாயக்க பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இதில் இன்றையதினம் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தொடர்பிலும் அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அனுர இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,2015 முதல் 2019 வரையான காலத்தில் தேசிய மத்திய கலாச்சார நிதியத்தின் நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
முன்னாள் கலாச்சார அமைச்சரின் செலவு அறிக்கை முக்கியமானது. 146 செலவு அறிக்கைள்.நிதியம் மற்றும் நிதியத்தின் உறுப்பினர்களின் எந்த அனுமதியும் இன்றி நிதியத்தின் பணம் செலவிடப்பட்டுள்ளது.
சஜித் பிரேமதாசவின் நேரடியான உத்தரவின் கீழேயே இந்த செலவுகளை செய்தாக சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.
செலவு செய்து முடிந்த பின்னர் 2019.11.15ஆம் திகதி, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அவசர பணிப்பாளர் குழு நியமிக்கப்படுகிறது. ரணில் விக்ரமசிங்க, ஜோன் அமரதுங்க, மங்கள சமரவீர, சஜித் பிரேமதாச, அகில விராஜ் , மனோ கணேசன், பேர்னாட் பிரியந்த இவர்கள் பணிப்பாளர்கள் குழுவில் இருந்தனர்.பணிப்பாளர் குழுவின் தலைவர் என்ற முறையில் ரணில் விக்ரமசிங்க இதில் கையெழுத்திடவில்லை.
பிரதமரின் செயலாளர் ஏக்கநாயக்க கையெழுத்திட்டுள்ளார். அகில விராஜ் உட்பட மேலும் சிலர் கையெழுத்திடவில்லை.
இது தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது. விசாரணை அறிக்கை எமக்கு நேற்று கிடைத்தது. அதனை சரியாக தொகுத்துக் கொள்ள முடியவில்லை. மத்திய கலாச்சார நிதியத்தின் சுமார் மூன்று பில்லியன் ரூபா நிதி முறைகேடு இடம்பெற்றதாக தெரிவித்தார்.