
வாஷிங்டன், மே 05
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் கொரோனா பாதிப்புகளுக்கான லேசான அறிகுறிகள் தெரிய வந்தவுடன் உடனடியாக பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.
இதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். இதுபற்றி ஆன்டனியின் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், முழு அளவில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டும், முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்திய பின்னரும் அவருக்கு லேசான அறிகுறிகள் தென்பட்டன.
அவருக்கு எடுத்த முதல் பரிசோதனையில் தொற்று இல்லை என தெரிய வந்தது. எனினும், அடுத்த பரிசோதனையில் தொற்று பாதிப்பு உறுதியானது. ஆன்டனி பல நாட்களாக அதிபர் பைடனை பார்க்கவில்லை. அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, ஆன்டனியுடன் பைடன் நெருங்கி இருக்கவில்லை என தெரிவித்து உள்ளது. இதனை தொடர்ந்து ஆன்டனி வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.
வீட்டில் இருந்தபடியே பணியாற்றுவார். இதில் இருந்து மீண்டும், மீண்டும் முழு அளவில் பணிக்கு வரவும் பயணங்களை மேற்கொள்ளவும் அவர் எதிர்பார்த்து உள்ளார். கடந்த ஏப்ரலில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என கூறினார். இதேபோன்று கடந்த மார்ச்சில், வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் ஜென் சாகிக்கு 2வது முறையாக கொரோனா உறுதியான நிலையில், ஜனாதிபதி பைடனுடனான பெல்ஜியம் மற்றும் போலந்து நாட்டிற்கான பயண திட்டத்தினை ரத்து செய்து விட்டார்.