முல்லைத்தீவு முறிகண்டி பகுதியில் பாரிய விபத்து! தெய்வாதீனமாக தப்பிய வைத்தியர்

முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி செல்வபுரம் பகுதியின் A9 வீதியில் பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் தெய்வாதீனமாக வைத்தியர் ஒருவர் சிறு காயங்களுடன் தப்பித்துக் கொண்டார்.

முறிகண்டி திசையிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த ஜீப் ரக வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

வேகமாக பயணித்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதி அருகில் உள்ள மரங்களுடன் பலமாக மோதியுள்ளது.

குறித்த மரங்களுடன் மோதியமையால் வர்த்தக நிலையத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

எனினும் பாரிய விபத்திலிருந்து மக்கள் குறித்த மரங்களால் தப்பித்துக் கொண்டனர்.

விபத்துடன் தொடர்புடைய வாகனத்தில் இருவர் பயணித்த நிலையில் வாகனத்தை செலுத்திய வைத்தியர் சிறு காயங்களிற்குள்ளான நிலையில் அவசர உதவி அம்புலன்ஸ் ஊடாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வைத்தியரின் தனிப்பட்ட வாகனமே விபத்துக்குள்ளானது என்பதுடன், அக்கராயன் பிரதேச வைத்தியசாலையில் கடமையாற்றி வருபவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

A9 வீதியோரங்களில் வர்த்தக நிலையங்கள் அனுமதியற்ற நிரந்தர கட்டடங்களாக காணப்படுகின்றமை தொடர்பில் பல்வேறு தடவை புதுக்குடியிருப்பு பிரதேச சபையினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், தொடர்ச்சியாக வியாபார அனுமதிகள் பிரதேச சபையினால் வழங்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறான விபத்து சம்பவங்கள் இடம்பெறுகின்ற பொழுது மக்கள் உயிர் ஆபத்துக்களை எதிர்கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்படின் புதுக்குடியிருப்பு பிரதேச சபையினரும், வீதி அபிவிருத்தி அதிகார சபையினருமே பொறுப்புடையவர்களாவர் என பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *