
திருகோணமலை – தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட வயல் நிலங்களில் சிறுபோக விவசாய செய்கைக்கான தயார் படுத்தல் தற்போது இடம் பெற்று வருகின்றன.
இவ் நெற்செய்கை விவசாயத்துக்கான வயல் நிலங்களை இயந்திரம் மூலமாக உழுது நெல் விதைப்பும் இடம் பெற்று வருகிறது.
இதில் கல்மெடியாவ வடக்கு, கல்மெடியாவ தெற்கு உட்பட பல வயல் நிலங்களில் விதைப்பும் பதப்படுத்தலும் இடம் பெறுகின்றன.
இம் முறை அப் பகுதியில் குளத்தை நம்பியே விவசாய செய்கை இடம் பெற்றாலும் மன திருப்தியற்ற நிலை ஏற்பட்டு ஆர்வம் குறைந்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
பசளை தட்டுப்பாடு, யூரியாவின் விலை 45000 ரூபா வரை விலை ஏற்றம் தங்களை பாதித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
சேதனப் பசளை மூலமான கடந்த பெரும்போக நெற் செய்கை வெற்றியளிக்கவில்லை.
எனவே அசேதனப் பசளையே தங்களுக்கு மீண்டும் வேண்டும் என்ற கோரிக்கையினையும் முன்வைக்கின்றனர்.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் உழவுக்கான கூலித் தொகை அதிகரிப்பு ,டீசல் பெறுவது கடினம், உள்ளிட்ட பல சவால்களுக்கு மத்தியில் இம் முறை நெற் செய்கையை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.