
அரசியற் கட்சிகளின் அதிகரிப்பு ஜனநாயக மாக இருந்தாலும் நாட்டிற்கு பெரும் சாபக்கேடாகும் என கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம் எம் மஹ்தி தெரிவித்துள்ளார்.
இன்று (06) அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
நம் நாட்டில் அளவுக்கதிகமான அரசியற் கட்சிகள் காணப்படுவது ஜனநாய செயற்பாடாக இருந்தாலும் பல்வேறு பிரச்சினைகளை தோற்றுவிக்கக் கூடிய சாபக் கேடாகவும் காணப்படுகின்றது.
நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பு, அதிக தேர்தல் செலவு, தலைமைகளுக்கு கட்டுப்படாத பண்புகளை வளர்த்தல், பட்டம், பதவி, பணத்திற்கு விலை போதல், ஆட்சி அமைப்பதில் சிக்கல் நிலை, கருத்தொற்றுமை காண்பதில் சிக்கல் போன்ற பல்வேறு பிரச்சினைகளை தோற்றுவிக்கக் காரணமாகவும் அமைகின்றன.
தற்போது இலங்கையில் ஏற்பட்டிருக்கும் இவ்வாறான அரசியல் நெருக்கடிகளை தீர்க்கக் கூடிய சிறந்த தீர்வொன்றை காண்பதில் அரசியல் கட்சிகளின் அதிகரிப்பு ஒரு சாபக் கேடாகவே இருக்கின்றது.
எனவே எதிர்காலங்களில் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கையை குறைப்பது நாட்டிற்கும், நாட்டின் அபிவிருத்திக்கும் ஸ்திரத் தன்மைக்கும், ஜனநாயகத்தை நிலைக்கச் செய்யவும் வாய்ப்பாக அமையும் எனவும் சுட்டிக் காட்டினார்.