
யாழ்.நெடுந்தீவு பிரதேசத்தில் போதிய வசதிகள் இன்மை மற்றும் தொழில் வாய்ப்பின்மை என்பவற்றால் பூர்வீகமாக வாழ்ந்த மக்கள் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து வருகின்ற அவலத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
யாழ். மாவட்டத்தின் மிகவும் பழமைவாய்ந்த தீவுகளில் ஒன்றாக காணப்படும் நெடுந்தீவில் போதிய வசதிகள் இன்மை மற்றும் தொழில் வாய்ப்புக்கள் இன்மை காரணமாக பரம்பரை பரம்பரையாக நெடுந்தீவில் வாழ்ந்த மக்கள் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி, வவுனியா போன்ற இடங்களில் வசதி வாய்ப்புக்களையும் தொழில்களையும் தேடி குடிபெயர்ந்து வருகின்றனர்.
குறிப்பாக, நெடுந்தீவு மேற்கு சாறாப்பிட்டி வீட்டுத்திட்டம், நெடுந்தீவு கிழக்கு 12ம் வட்டாரம், 13ம் வட்டாரம், போன்ற பகுதிகளில் வாழ்ந்த மக்கள் அண்மைக்காலமாக அதிகளவில் வெளியேறியுள்ளனர்.
மருத்துவ வசதி உள்ளிட்ட போதிய அடிப்படை வசதிகள் இன்மை, தொழில் வாய்ப்புக்கள் இன்மை காரணமாக அதிகளவான மக்கள் இங்கிருந்து வசதி வாய்ப்புக்களைத்தேடி வெளியேறி வருகின்றனர்.
மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்கள் குறித்த பகுதிகளில் தொழில் வாய்ப்புக்கள் வருமானங்கள் இன்றி மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.