மருத்துவர்களை கறுப்பு பட்டி அணிந்து பணிக்கு செல்லுமாறும் அறிவித்தல்

கொழும்பு, மே 06

நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கு முன்பாகவும் இன்று மதியம் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அமைதியான போராட்ட பேரணிகளை நடத்துவதுடன் அனைத்து மருத்துவர்களையும் கறுப்பு பட்டி அணிந்து பணிக்கு செல்லுமாறும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இன்றைய ஹர்த்தால் தொடர்பாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் அறிக்கையில்,தற்போதைய பொருளாதார, சமூக, சுகாதார மற்றும் அரசியல் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு அனைத்துக் கட்சிகள் மற்றும் குழுக்களின் ஒருமித்த-திறன்பட ஒழுங்கமைக்கப்பட்ட திட்டத்தைச் செயல்படுத்துவது இன்றியமையாததாக இருந்தாலும், பொதுவான இலக்குகளை ஒதுக்கி வைக்கும் குறுகிய நிகழ்ச்சி நிரல்களை பின்பற்றும் அரசு மற்றும் எதிர்க்கட்சிகளால் தற்போதைய நெருக்கடி மோசமடைந்து செல்கிறது.

தற்போதைய ஊழல்மயமான அரசியல் கட்டமைப்பை முடிவுக்கு கொண்டு வருவதற்கு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அமைப்பாளர்களுக்கும் தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்திற்கும் இடையில் கடந்த புதன்கிழமை விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

தற்போதைய மக்கள் போராட்டத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புகளின் ஒற்றுமையின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட்டது. நாட்டில் தற்போது நிலவும் ஊழல் நிறைந்த அரசியல் கட்டமைப்பை முடிவுக்குக் கொண்டு வந்து நிரந்தர தீர்வை ஏற்படுத்துவதற்கான எந்தவொரு அமைதியான முயற்சிக்கும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தனது பூரண ஆதரவை வழங்கும்.

சுகாதார சேவையில் தற்போதுள்ள நிலையில் வேலைநிறுத்த நடவடிக்கைகளில் மேற்கொண்டு ஈடுபடுவதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் அசௌகரியங்கள் ஏற்படும். இவ்விடயங்களை கருத்திற்கொண்டு திட்டமிட்டபடி நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் தீவிரமான போராட்டங்களுக்கு மேலதிகமாக இன்றைய ஹர்த்தாலுக்கு இணங்கி பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டது.

நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கு முன்பாகவும் மதியம் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அமைதியான போராட்ட பேரணிகளை நடத்துதல். அனைத்து மருத்துவர்களும் கறுப்பு பட்டி அணிந்து பணிக்கு செல்லல், சமயத் தலைவர்கள், சிவில் சமூகத் தலைவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தற்போதைய நெருக்கடி மற்றும் அதற்கான தீர்வு குறித்த துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அரசாங்கமும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த ஊழல் மற்றும் அடக்குமுறை அரசியல் கட்டமைப்பை முடிவுக்குக் கொண்டு வராவிட்டால், எதிர்காலத்தில் வலுவான தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு (GMOA) தயக்கம் காட்டாது என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம் என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *