ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் தற்போதைய அரசை அதிகாரத்திலிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தி இன்று நாடளாவிய ரீதியில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது.
அரசாங்கத்திற்கெதிராக இன்றைய தினம் (06) முன்னெடுக்கப்படும் ஹர்த்தால் காரணமாக மூதூர், தோப்பூர் பகுதிகள் முற்றாக முடங்கின.
மூதூர் – தோப்பூர் பகுதிகளின் நகரங்களிலுள்ள அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.
தமிழ் முஸ்லீம் பாடசாலைகள் அனைத்திலும் ஆசிரியர்கள் மாணவர்கள் வருகைதரவில்லை.
பிரதேச செயலகம், பிரதேச சபை,அஞ்சல் அலுவலகம்,வங்கிகள், வலயக் கல்வி அலுவலகம் உள்ளிட்ட அரச திணைக்களங்களுக்கு உத்தியோகத்தர்கள் எவரும் வருகை தராமையால் வெறிச்சோடிப்போய் காணப்படுகின்றன.
மூதுர் தள வைத்தியசாலையின் நுழைவாயிலில் கருப்புக்கொடி தொங்கவிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இல்லாமையால் மூதூர் அரச பேருந்து சாலை பஸ்கள் பேரூந்து நிலையத்தில் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.


கிண்ணியாவில் பூரண ஹர்த்தால்
நாடு பூராகவும் இடம் பெற்று வரும் அரசாங்கத்திற்கு எதிரான பூரண ஹர்த்தால் கிண்ணியாவிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த ஹர்த்தால் காரணமாக இன்று (06) கிண்ணியாவிலும் கடைகள் மூடப்பட்டு இதனை மக்கள் அனுஷ்டித்துள்ளனர்.
குறிப்பாக அரச வங்கிகள், பிரதேச செயலகம், தபாலகம், விவசாய அபிவிருத்தி திணைக்களம், பாடசாலைகள் உள்ளிட்ட அரச திணைக்களங்கள் மூடப்பட்டுள்ளதுடன் அரச சேவைகள் எதுவும் இடம் பெறாமை முடங்கின.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் மாத்திரம் சேவையில் ஈடுபட்டன. தனியார் பொதுப் போக்குவரத்து சேவைகள் இடம் பெறவில்லை.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கான தீர்வை முன்வைக்க கோரியும் அரசாங்கத்தை பதவி விலக கோரியுமே பல தொழிற் சங்கங்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


