உள்ளே விவாதம் வெளியே ஆர்ப்பாட்டம்; அதிரும் பாராளுமன்ற வளாகம்!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தொடரும் பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஒருபுறம் பொருளாதார நெருக்கடி தொடரும் நிலையில் மறுபுறம் மின்வெட்டு வேலைவாய்ப்பின்மை அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடு போன்ற பல்வேறு பிரச்சினைகளை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் தற்போதைய அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் பல்வேறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் பாராளுமன்றில் நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அது தொடர்பான விவாதங்கள் மற்றும் வாக்கெடுப்பு என்பன விரைவில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை கடந்த செவ்வாய் கிழமை ஆரம்பமான பாராளுமன்ற மே மாதத்திற்கான கூட்டத்தொடரில் நேற்றையதினம் பிரதி சபாநாயகர் தெரிவு இடம்பெற்றன.

இதேவேளை பாராளுமன்றத்திற்கு நுழையும் பிரதான வீதியில் அணைத்து பல்கலைக்கழக மாணவர்களால் ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டதுடன் ஆர்ப்பாட்ட பேரணியை தடுப்பதற்காக பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டு வீச்சு நடத்தப்பட்டது.

இந்நிலையில் அமைதியான முறையில் போராட்டத்தை தொடர்ந்த மாணவர்கள் நேற்றிரவு குறித்த பகுதிக்கு கொறா கோ கம என பெயரிட்டு தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை இன்றையதினம் பாராளுமன்ற அமர்வானது காலை 10மணிக்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் ஆரம்பமாகி தற்போது விவாதங்கள் நடைபெற்று வருகின்றது.

அதேவேளை பாராளுமன்றத்திற்கு வெளியே பல்கலைக்கழக மாணவர்கள் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேநேரம் பாராளுமன்ற வளாகத்தில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *