
லாகூர், மே 07
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நடனம் மற்றும் மாடலிங் தொழிலில் ஈடுபட்டதற்காக 21 வயது சகோதரியை, சகோதரன் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லாகூரிலிருந்து 130 கிமீ தொலைவில் உள்ள ரெனாலா குர்த் ஒகாராவைச் சேர்ந்த சித்ரா என்ற பெண், குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக, உள்ளூர் ஆடை நிறுவனம் ஒன்றில் மாடலிங் செய்து கொண்டிருந்தார்.
மேலும் பைசலாபாத் நகரின் திரையரங்குகளில் நடனமாடி வந்துள்ளார். சித்ராவின் பெற்றோர்கள் குடும்ப பாரம்பரியத்திற்கு எதிரானது என்று கூறி இந்த தொழிலை விடும்படி அவரை தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர். கடந்த வாரம் சித்ரா, தனது குடும்பத்தினருடன் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவதற்காக பைசலாபாத்திலிருந்து வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று சித்ராவிடம் அவரது பெற்றோர் மற்றும் சகோதரன் ஹம்சா வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சித்ராவின் நடன நிகழ்ச்சியை உறவினர் ஒருவர் செல்போனில் தனக்கு அனுப்பியதைப் பார்த்து ஆத்திரமடைந்த அவரது சகோதரன், சித்ராவை சுட்டதில் சம்பவ இடத்திலேயே சித்ரா உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது சகோதரன் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் ஹம்சாவை கைது செய்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.