இஸ்ரேலில் சுதந்திர தின கொண்டாட்டத்தில் கத்திக்குத்து: 3 பேர் பலி

டெல் அவிவ், மே 07

இஸ்ரேல் நாட்டின் 74-வது சுதந்திர தினம் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் சுதந்திர தின கொண்டாட்டங்கள் களைக்கட்டின. அந்த வகையில் இஸ்ரேலின் மத்திய பகுதியில் அமைந்துள்ள எலாட் நகரில் உள்ள ஒரு பூங்காவில் நேற்று முன்தினம் இரவு சுதந்திர தினம் கொண்டாட்டம் நடந்தது.

இதற்காக உள்ளூரை சேர்ந்த ஏராளமான மக்கள் பூங்காவில் கூடியிருந்தனர். கொண்டாட்டங்கள் நிறைவடைய இருந்த சமயத்தில் மர்ம நபர்கள் கையில் கத்தி மற்றும் கோடாரியுடன் பூங்காவுக்குள் நுழைந்தனர். அவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களை கத்தியால் சரமாரியாக குத்தியும், கோடாரியால் வெட்டியும் கொடூர தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பீதியடைந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். ஆனாலும் அந்த மர்ம நபர்கள் சற்றும் ஈவு இரக்கமின்றி அவர்களை விரட்டி சென்று கண்மூடித்தனமாக தாக்கினர். இந்த கொலை வெறி தாக்குதலில் 40 வயதுக்குட்பட்ட 3 நபர்கள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து இறந்தனர். மேலும் 4 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

இதனிடையே இந்த தாக்குதல் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

அதை தொடர்ந்து தாக்குதலில் காயமடைந்த 4 பேரையும் போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் இருவரும் சர்ச்சைக்குரிய மேற்கு கரை பகுதியில் உள்ள ஜெனின் நகரை சேர்ந்த பாலஸ்தீன வாலிபர் என்பதை இஸ்ரேல் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும் அவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டு, அவர்களை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டை முடுக்கி விட்டுள்ளனர். மேற்கு கரை பகுதிக்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதோடு, தேடுதல் வேட்டையில் ஹெலிகாப்டரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தாக்குதலை தொடர்ந்து உயர்பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்திய இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட், இந்த கோர சம்பவத்துக்கு காரணமான பயங்கரவாதிகள் அதற்கான விலையை கொடுப்பார்கள் என எச்சரித்தார். இதனிடையே இஸ்ரேலில் சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *