
தையிட்டியில் தனியார் காணியில் அமைக்கப்படும் விகாரையின் கட்டுமானப் பணிகளை இராணுவத் தளபதி நேரில் ஆராய்வு!
பலாலியில் அமைந்துள்ள யாழ்பாணம் படைத் தலைமையகத்துக்கு இன்று காலை வருகை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா வலி.வடக்கு தையிட்டியிலுள்ள தனியார் காணியொன்றில் அமைக்கப்பட்ட திஸ்ஸ ரஜமஹாவிகாரைக்குச் சென்று கட்டுமானப் பணிகளை நேரில் ஆராய்ந்தார்.
வலி.வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விகாரையை அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டதுடன் கட்டுமானப் பணிகளை அனுமதிப்பதில்லை என்று தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
எனினும் கடும் எதிர்ப்பையும் மீறி காங்கேசன்துறை திஸ்ஸ ரஜமஹா விகாரை அமைக்க இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவால் அடிக்கல் நடப்பட்டது.
நாட்டில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் சிரமங்களை எதிர் கொண்டுள்ள நிலையில் விகாரையின் கட்டுமானப் பணிகள் தொடர்பில் இராணுவத் தளபதி கள ஆய்வுகளை மேற்கொண்டுள்ளமை விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.