யாழ்ப்பாணம்- அல்வாய் பகுதியில் வீடுகள் தீக்கிரை- வெட்டுக்குமார் கைது!

யாழ்.வடமராட்சி அல்வாய் வடக்கு மகாத்மா கிராமத்தில் வாள்வெட்டு குழுவின் அட்டகாசத்தில் இரு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

மேலும் சில வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் வாள்வெட்டு குழுவைச் சேர்ந்த  “வெட்டுகுமார்” என்பவரை கைது செய்த பொலிஸார்  தலைமறைவாகியுள்ள ஏனையோரை தேடி வருகின்றனர்.

கடந்த 2ஆம் திகதி மது போதையில் அல்வாய் வடக்கு மகாத்மா கிராமத்தில் நுழைந்த வெட்டுக்குமாரும் அவரது கூட்டாளிகளும் இணைந்து அப்பகுதியில் உள்ள  வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை அடித்து நொருக்கி வன்முறையில் ஈடுபட்டமையால்,  6 குடும்பங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி வேறு இடங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் மீண்டும் நேற்று முன்தினம் இரு வீடுகளுக்கு பெற்றோல் ஊற்றி தீ வைத்த குறித்த  குழு,  அப்பகுதியிலுள்ள மேலும் சில வீடுகளின் ஜன்னல்களை உடைத்தும்,  சொத்துக்கள் மற்றும் உடமைகள் என்பவற்றுக்கு தீ வைத்து அவற்றை தீக்கிரையாக்கியுள்ளனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய  வெட்டிக்குமார் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவனது சகோதரன் ஜெயா என்ற ரவுடி உட்பட சிலர் தலைமறைவாகியுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.

இதேவேளை  தினமும் அச்சத்துடன் வாழ்வதாக அல்வாய் வடக்கு மகாத்மா கிராம மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply