வட மாகாணத்திலுள்ள சகல அரச வைத்தியசாலை வைத்தியர்களதும் பங்குபற்றுதலுடன் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாணம் தழுவிய ரீதியில் மிகப்பெரும் கண்டனப் போராட்டமொன்று நாளை திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டமானது, வட மாகாணத்திலுள்ள சகல அரச வைத்தியசாலை வைத்தியர்களதும் பங்குபற்றுதலுடன், யாழ் போதனா வைத்தியசாலை முன்றலில் நாளை காலை 9 மணியளவில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாளை நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த யாழ். மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் இணைப்பாளர் வைத்திய கலாநிதி கதிரமலை உமாசுதன்,
தற்போது உள்ள மோசமான திட்டமிடப்படாத ஊழல் நிறைந்த, மக்களுக்கு குந்தகம் விளைவிக்கும் மக்களது அடிப்படை உரிமைகளான சுகாதாரம், இலவசக் கல்வி மற்றும் அவர்களுக்குரிய அத்தியாவசியத் தேவைகளைக் கூட நிறைவு செய்து கொள்வதற்கு உரிய வசதிகளை வழங்காத இந்த அரசாங்கத்தையும், அதிலுள்ள மக்கள் பிரதிநிதிகளையும், அவர்களுடைய பொறுப்பற்ற நடவடிக்கைகளையும் எதிர்த்து தற்பொழுது மக்கள் கிளர்ந்தெழுந்துள்ளனர்.
தற்பொழுது இலங்கை முழுவதிலும் பல்வேறு வடிவங்களில், மக்களது இயலாமையின் வெளிப்பாடாக, அவர்களுக்கு தேவையான அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவு செய்துகொள்ள முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலையில் அவர்களை நடு வீதிக்கு போராட தள்ளப்பட்டிருக்கும் அவர்களைப் போராட்டத்துக்கு தள்ளப்பட்டிருக்கும் இந்த நிலைமைக்கு எதிராக மக்களது போராட்டம் வலுவடைந்துள்ளது.
இந்த அரசாங்கத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய போராட்டங்களுடன் அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் இணைந்துள்ளது என தெரிவித்தார்.