வர்த்தக மாபியாக்களால் பொதுமக்களுக்கு பாதிப்பு! இராதாகிருஷ்ணன்

நாட்டில் என்ன சட்டங்களைக் கொண்டு வந்தாலும், வர்த்தக மாபியாக்களை கட்டுப்படுத்த முடியாத நிலையிலேயே தற்போதைய அரசாங்கம் காணப்படுகிறது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஹட்டனில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

நாட்டில் இன்று பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. கொரோனா மற்றும் டொலர் தட்டுப்பாட்டால் மட்டும் இந்நிலைமை ஏற்படவில்லை. அமைச்சுகளில் இடம்பெறும் ஊழல்களும் இதற்கு பிரதான காரணமாகும்.

சீனி, எண்ணைய், வெள்ளைப்பூடு என எல்லாவற்றிலும் ஊழல்கள் தலைவிரித்தாடுகின்றன. அதேபோல, வர்த்தக மாபியாக்களை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் சட்டங்களை கொண்டுவந்தாலும் அவை அமுலுக்கு வருவதை காணமுடியவில்லை.

வர்த்தக மாபியாக்கள் பொருட்களின் விலைகளை அதிகரிப்பதால் பொதுமக்களுக்கே பாதிப்பு ஏற்படுகின்றது.

அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கைது செய்யப்பட்ட விதத்தை நாம் கண்டிக்கின்றோம்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்படுவதாக இருந்தால் அது பற்றி சபாநாயகருக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும்.

ஆனால், தற்போது அந்த நடைமுறை பின்பற்றப்படுவதில்லை. சபாநாயகரும் நாடாளுமன்றம் மற்றும் தனக்கான அதிகாரத்தை பயன்படுத்துவது இல்லை.

நல்லாட்சியின் போது தமிழ் இலக்கிய பாடத்திட்டத்தில் இருந்து மலையக இலக்கியத்தை புறக்கணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மலையகம் சார்ந்த விடயங்கள் சைவ சமய பாடநெறிக்குள்கூட உள்வாங்குவதற்கு நான் கல்வி இராஜாங்க அமைச்சராக உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுத்தேன்.

2019 இற்கு பின்னரான காலப்பகுதியில் இது மறைக்கப்பட்டதா என தெரியவில்லை. இது தொடர்பில் ஆராய்ந்து பார்த்து, அறிவித்தல் ஒன்றை விடுக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *