நினைவேந்தலை தடுக்கும் ஆட்சியாளரிடம் உள்ளகப் பொறிமுறையில் நீதியா? சபா குகதாஸ்

வடக்கு கிழக்கில் நினைவேந்தல்களை தடுக்கும் ஆட்சியாளர் தெற்கில் நினைவு கொள்ள பூரண சுதந்திரம் வழங்கியுள்ளனர். அத்துடன் தமிழர்கள் சுகாதார முறைப்படி நினைவேந்தல் செய்தால் கொரோனா! ஆனால் தெற்கில் நினைவேந்தலுக்கு கொரோனாவும் இல்லை சுகாதார வழிமுறையும் இல்லை. இதுதான் மனிதவுரிமை, ஒரே நாடு ஒரே சட்டம்.

அகிம்சை வழியில் இந்திய மத்திய அரசிற்கு ஐந்து அம்ச கோரிக்கைகளை முன் வைத்து ஒரு துளி நீர் கூட அருந்தாமல் தன் உயிரை ஈகம் செய்த தியாகி திலீபனின் நினைவேந்தலை தடுக்கும் இந்த பாசிச ஆட்சியாளரிடம் உள்ளகப் பொறிமுறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்குமா? ஒரு போதும் இல்லை. ஈவிரக்கம் மனித நேயம் இல்லாத சக இனங்களை சகோதரத்துவமாக மதிக்காத அரசாங்கத்திடம் நீதியை எதிர்பார்த்தல் முட்டாள் தனம்.

சரணடைந்தவர்களை கையில் ஒப்படைக்கப்பட்டவர்களை வலிந்து காணாமல் ஆக்கியவர்களை எங்கே என்று கேட்டால் மரணச் சான்றிதழ் தருவேன் என்று கூறும் ஆட்சியாளரிடம் தமிழர்களுக்கு நீதியா?

அடிப்படை மனித உரிமைகளைக் கூட வழங்க மறுக்கும் பௌத்த சிங்கள பேரினவாத அரசிடம் நீதி ஒரூ போதும் இல்லை என்பதை வரலாறு தொடர்ந்தும் நிரூபித்துள்ளது.

தியாக தீபம் திலீபன் சொன்னது போல் ஐனநாயக வழியில் மக்கள் புரட்சி ஒன்று வெடிப்பதன் மூலமே தமிழர்களின் விடுதலைக் கதவை திறக்கமுடியும் அதுவே தமிழர் தாயகத்தின் விடுதலைக்கு உறுதியான விடியலைத் தரும்.

Leave a Reply