
வலப்பனை – கீர்த்தி பண்டாரபுர பொலிஸ் சோதனைச் சாவடி பகுதியில், காரொன்று பாதையை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஐந்து மாத குழந்தையொன்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக வலப்பனை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (08) மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மேலும் எழுவர் காயமடைந்து வலப்பனை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கண்டியிலிருந்து பதுளை நோக்கி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேருடன் பயணித்த காரே விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து, வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையாலேயே இடம்பெற்றுள்ளதாக வலப்பனை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.