நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார, அரசியல் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க முடியாது போராட்டங்களை நடாத்துகின்ற மக்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து பதவி விலகாமல் காலத்தை இழுத்தடிப்பது போராட்டத்தை மேலும் உக்கிரமடையச் செய்யும் ஆபத்து மிக்கது என கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம் .எம் மஹ்தி தெரிவித்துள்ளார்.
இன்று (09) அவரால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவ்வறிக்கையில்,
தமது இலக்கை அடையும் வரை வியூகங்களை மாற்றி மாற்றி போராட்டத்தை தொடரும் போராட்டக் காரர்கள் 11ம் திகதியிலிருந்து தொடரான ஹர்த்தாலை அறிவித்திருக்கின்றனர்.
அதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தை சுற்றி வளைத்தல், அரச ஊழியர்கள் தொடரான பணிப் பகிஷ்கரிப்பு, போக்கு வரத்தை ஸ்தம்பிக்கச் செய்தல், அனைத்து தனியார் வாகனங்களையும் வீதியின் குறுக்கே விட்டுச் செல்லல் , அரச ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்களினதும் அமைச்சர்களினதும் இல்லங்களை முற்றுகையிட்டு அவர்களை வீட்டுக் காவலில் வைத்தல், ஆட்சியாளர்களை சுற்றி வலைத்தல் என வியூகங்கள் மாற்றப் பட்டு போராட்டங்கள் நீண்டு கொண்டு செல்வதற்கான வாய்ப்புகளே காணப்படுகின்றன.
பதவி பட்டங்களுக்காக சர்வாதிகளாக மாறியிருந்த ஆட்சியாளர்களின் இறுதித் தருணம் எவ்வாறு அமைந்திருந்தன என்பது நமக்கும் சிறந்த படிப்பினையாகும்
எனவே ஆட்சியாளர்களும் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இறுதியில் அவமானப்பட்டு அசிங்கப்படுத்தப் பட்டு வெளியேற்றப் படுவதற்கு முன்னர் நாட்டின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு தாமாகவே பதவிகளை துறந்து உடனடியாக புதிய அரச நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்கு இடமளித்தல் மாத்திரமே சிறந்த பலனைத் தரும் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.