
அனுராதபுரத்துக்கு நேற்று திடீர்ப் பயணம் மேற்கொண்டு மகாபோதியை வழிபட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ச , பெரமுனவின் நாடாளுமன்ற, முன்னாள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களை இன்று சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். இதனால் அவர் இன்று பிரதமர் பதவியில் இருந்து விலகுகின்றாரா? என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது.
பிரதமர் இன்று திங்கட்கிழமையுடன் பதவி விலகுவார் என்று கடந்த மூன்று தினங்களாக கொழும்பு அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகின்றது. வழக்கமாக சிங்கள அரசியல் தலைவர்கள் மிகமுக்கியமான முடிவுகளை எடுக்கும் போது மகாபோதியை வணங்குவதுண்டு.
இந்தப் பின்னணியில் அவர் பெரமுனவின் உறுபினர்களையும் திடீரெனச் சந்திக்கின்றமை பதவி விலகல் தொடர்பான கருத்துக்களையும் சந்தேகங்களையும் வலுப்படுத்தியுள்ளது. பிரதமராகப் பதவியேற்றுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித்துக்கு நேற்றுமுன்தினம் ஜனாதிபதி கோத்தாபய அழைப்பு விடுத்திருந்தார்.
இதனால் மஹிந்த பதவி விலகுவது தொடர்பில் தீர்க்கமான முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டது என்று அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளளனர்.