
தமிழர் தாயகத்தில் தடைகளைத் தாண்டி திலீபனுக்கு அஞ்சலி!
இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாகி திலீபனின் 34ஆவது ஆண்டு நினைவேந்தல் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நேற்றுக் கடைப்பிடிக்கப்பட்டது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தியாகி திலீபனின் நினைவேந்தலை நடத்துவதற்கு பொலிஸார் நீதிமன்றங்களின் ஊடாகச் சில தடை உத்தரவுகளைப் பெற்று நினைவேந்தலைத் தடுக்க முயன்றிருந்தபோதும், அவற்றை மீறி கொரோனா பாதுகாப்பு சுகாதார நடைமுறைகளுக்கு அமையப் பல இடங்களில் அமைதியான முறையில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.
யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் மாணவர்களால் நினைவேந்தல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், தமிழ் அரசியல் பிரமுகர்கள் ஒழுங்கமைக்கப்பட்ட இடங்களில் அஞ்சலி செலுத்தனர். வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.
1987ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 15ஆம் திகதி இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். அவரது கோரிக்கைகளுக்கு இந்திய அரசு செவிசாய்க்காத நிலையில், தனது கொள்கையில் உறுதியாக நின்று செப்ரெம்பர் மாதம் 26ஆம் திகதி முற்பகல் 10.48 மணிக்கு உயிர் நீத்தார்.
ஆண்டுதோறும் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் தமிழ் மக்களால் கடைப்பிடிக்கப்படும் நிலையில், இம்முறை நினைவேந்தலைத் தடுக்கும் நோக்குடன் பொலிஸார் நீதிமன்றங்கள் ஊடாகத் தடை உத்தரவுகளைப் பெற்றிருந்தனர். நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்த முயன்ற நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். ஆயினும் பொலிஸாரின் கெடுபிடிகளையும் மீறி தமிழர் பகுதிகளில் உணர்வுடன் தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று நடைபெற்றன.

