அழகிய தேசம் அழிவு நிலைக்கு யார் பொறுப்பு? சத்தியமூர்த்தி கேள்வி!

அழகிய தேசம் அழிவு நிலைக்கு யார் பொறுப்பு?என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியகலாநிதி த.சத்தியமூர்த்தி கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

இந்து சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படுகின்ற இலங்கை மூவின மக்களும் நிம்மதியாகவும் தங்கள் அடையாளத்தையும் அதிகாரத்தையும் பேணி சிங்கப்பூரை விட சிறப்பாக இருந்திருக்க வேண்டிய ஒரு நாடு.

நீண்ட நாட்களாக இன ஒடுக்குமுறை யுக்திகளை கையாண்டு கட்டி வளர்க்கப்பட்ட சமூகம் ஆகையினால் திடீரென நாடு பற்றி எரிகின்றது. அன்று மனம்பேரிக்கு நடந்த கொடுமையில் இந்த நாடு பல பாயங்களை கற்றிருக்க வேண்டும்.

ஆனால் பின்னாளில் பல சந்தர்ப்பங்களில் மனிதர்களை ஆடை இல்லாமல் பார்க்கும் மிருக கலாச்சாரத்தை இந்த நாடும் தெரிந்தும் தெரியாதவர்கள் போன்று நடந்து கொண்டதன் விளைவு இன்று மீண்டும் தொடர்ந்திருக்கிறது.

21ம் நூற்றாண்டில் வெட்கித் தலை குனிய வேண்டிய ஒரு செயல். மனித நாகரீகத்திற்கு அப்பாற்பட்டது.

ஒருவரின் ஆடையை அகற்றுவது அதனை படம் எடுப்பது அதனை பரிமாற்றம் செய்வது மனித குலத்துக்கு ஒவ்வாத செயல். இந்த நாடு சகல வளங்களையும் கொண்டிருக்கிறது.

படிப்பறிவில் ஆசியாவில் முன்னணி வகிக்கும் ஒரு நாடு. பல பிரசாத் பிழையான ஆட்சி முறையாலும் தலைமைத்துவத்தாலும் நாட்டின் வளங்கள் முழு நடித்த பிழையான தலைமைத்துவத்தினால் இன்று ஏழ்மை நாடாகிவிட்டது.

பொறுப்புக் கூற ஒருவரும் முன் வரவில்லை. இந்த நாட்டின் செல்வங்கள் சூறையாடப்பட்டு பல குடும்ப ராஜ்ஜியங்கள் கட்டி எழுப்பப்பட்டு இருக்கின்றது. இலங்கைக்கு வெளியே இன்று பலருக்கு பிழையான முறையில் சேகரிக்கப்பட்ட சொத்துக்கள் பல கோடிகள் இருக்கின்றன.

இலங்கையில் நடைபெற்ற பல அசம்பாவிதங்களில் இருந்து பாடங்கள் ஏதும் கற்றுக் கொள்ளப்படவில்லை. மூடி மறைக்கப்பட்டன. இன்று அதன் திசை திடீரென திரும்பிக் கொண்டது. இலங்கை நாடு மனித விழுமியங்களுக்கான அடிப்படை விதிகளில் கட்டி எழுப்பப்படாவிட்டால் மீண்டும் மனித குலத்துக்கு ஒவ்வாத செயல்கள் நடைபெற வாய்ப்பு இருக்கின்றது.

இந்த நாட்டின் திசையை தீர்மானிக்கின்ற அரசியல் உயர் சக்திகள் மற்றும் அரச இயந்திரத்தின் உயர் அதிகாரிகள் பல வருடங்களாக செய்த ஊழல்களின் ப தன் இன்று நாடு திடீரென பொருளாதார புயலில் சிக்கிக் கொண்டது.

இந்த நாட்டில் பணக்காரனுக்கும் ஏழைகக்குமான இடைவெளி தொடர்ச்சியாக அதிகரித்து கொண்டிருக்கின்றது. ஏழை மக்களால் அடிப்படை வசதிகளோடு வாழ முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. இதனை நிவாரணத்தினால் சரிப்படுத்த முடியாது.

சரியான பொருளாதார கொள்கையால் அவர்களை இந்த தேசத்தில் வலுவான சமூகமாக வாழ வழி சமைக்க வேண்டும்.இலங்கையில் பல வன்முறைகள் நடைபெற்றிருக்கின்றது.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மேலெழுந்த வாரியாக சில விசாரணைகள் ஒரு சிலருக்கு தண்டனை என கூறப்பட்டாலும் பெரும்பாலான சந்தர்ப்பத்தில் முழுமையாக மூடி மறைக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே இன்று வன்முறை கலாச்சாரத்தில் இருந்து இந்த நாடு விடுபடுவதற்கு பல காரியங்களை செய்ய வேண்டும்.

மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட வர்கள் மருத்துவமனை ஊழியர்கள் சிலரினால் தாக்கப்பட்டதை காணக்கூடியதாக இருக்கின்றது. இது ஒரு இழிவான செயல். சுகாதார சேவை அதன் அடிப்படை விழிமயங்களோடு கட்டி எழுப்பப்பட வேண்டும்.

நாட்டை யார் நிர்வகிக்கின்றார்கள் என தெரியாத நிலையில் சுகாதார சேவை தொழிற்சங்கங்கள் சேவை நிறுத்தத்தில் ஈடுபட்டு மக்களை அவலத்தை உண்டாக்குவதில் எந்த பயனும் இல்லை.இந்த உலகில் ஒருவர் இன்னொருவரை தாக்கவோ உயிர் கொலை செய்யவோ உரிமை இல்லை.

இந்த வன்முறை முறை கலாச்சாரத்தை இல்லாது ஒழிக்க கட்டுமானங்களை செய்ய வேண்டும்.இந்த நாடு விபத்தில் சிக்கிக் கொண்ட டைட்டானிக் கப்பலின் நிலையை அடைந்துள்ளது. இந்த நாடு தொடர்ந்தும் சரியான திசையில் பயணிக்க வேண்டுமானால் எல்லோரதும் பங்களிப்பும் தேவை. உடனடியாக செய்ய வேண்டிய காரியங்களிற்கு தாமதத்தை ஏற்படுத்தக் கூடாது.

1. இந்த நாட்டை நிர்வகிக்கின்ற சரியான தலைமைத்துவங்கள் தேவை.

2. போலியான தலைமைத்துவங்கள் வீடு செல்ல வேண்டும்.

3. இனங்களுக்கு இடையே காணப்படுகின்ற முரண்பாடுகள் தீர்க்கப்பட்டு அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும்.

4. நடைபெற்ற ஊழல்களும் அனைத்தும் விசாரிக்கப்பட வேண்டும்.

5. தற்போதுள்ள பல கட்டமைப்புகள் பல மறு சீரமைக்கப்பட வேண்டும்.

6. பாதுகாப்பான தேசம் என்ற நிலையை அடைய வேண்டும்.

இந்த தேசம் எதிர்கால சந்ததிக்குரியது. தற்போது இருக்கும் நாங்கள் மிகவும் பொறுப்போடு நடந்து எதிர்கால சந்ததியினருக்கு வளமான பாதுகாப்பான தேசத்தை கையளிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *