போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டமைக்கு அரச ஆசிரியர்களின் சங்கம் கண்டனம்!

முறையற்ற அரசாங்கத்துக்கு எதிராக காலிமுகத்திடலில் அமைதியான முறையில் இடம்பெற்று வந்த போரட்டத்தினை முன்னெடுத்த போராட்டக்காரர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தினை மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம் என இலங்கை அரச ஆசிரியர்களின் சங்கத்தின் கிழக்கு மாகாண செயலாளர் கோபாலசிங்கம் சுஜிகரன் தெரிவித்துள்ளார்.

இன்று ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடுகையில்,

30 நாட்களாக இடம்பெற்றுவந்த போரட்டத்தினை குழப்பும் வகையில் குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவான குண்டர்களால் அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்த போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டமை குறித்து இலங்கை அரச ஆசிரியர்களின் சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது.

ஆட்சியிலுள்ள அரசாங்கத்தின் ஒழுங்கற்ற ஆட்சியால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் அரசுக்கு எதிராக மிகவும் அமைதியான முறையிலேயே இந்த போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

எனினும் இவர்களின் குரலுக்கு அரசாங்கம் செவிசாய்க்காத நிலையில் மேற்படி கீழ்த்தரமான தாக்குதல் காரணமாக மக்கள் இன்று ஆத்திரமடைந்து நாடு முழுவதும் அமைதியற்ற சூழல் உருவாகியுள்ளது.

பொதுமக்கள் ஒருவரை ஒருவர் தாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நேற்றைய இச் சம்பவம் இலங்கை வரலாற்றில் ஒரு ஆறாத வடுவாகவே காணப்படும் என்பது திண்மம்.

ஆட்சியிலுள்ளவர்கள் மக்களின் வலி மற்றும் வேதனைகளைப் புரிந்து உடன் விரைந்து செயற்பட்டு நாட்டில் அமைதி நிலையினை ஏற்படுத்த வேண்டும். உடன் அரசியல் நிலமைகளை சீர்செய்ய வேண்டும்.

இக்கட்டான இந்நிலையில் மக்களின் நிலையினை புரிந்து செயற்பட வேண்டும். நல்லதொரு அரசியல் நிலைமையினை கட்டியெழுப்ப வேண்டும் என இலங்கை அரச ஆசிரியர்களின் சங்கம் இடித்துரைக்கின்றது.

நிலமை சீராகும் வரையில் மக்களின் பக்கமாக நின்றே எமது ஆசிரியர் சங்கம் போராடும் எனவும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

மேலும் பொதுமக்கள் இந்த இக்கட்டான நிலையில் நிதானம் இழக்காது வன்முறையில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். நீங்கள் செய்கின்ற செயலில் முற்றாக பாதிக்கப்படப் போவது எமது சமுகமே.

பொறுமையை கடைப்பிடித்து அமைதியான முறையில் உங்கள் போராட்டத்தினை மேற்கொள்வது இந்நிலையில் யாவருக்கும் நன்மை பயக்கும். மேலும் மாணவர்கள் கடந்த மூன்று வருடங்களாக கல்வி நிலையில் பாரிய வீழ்ச்சியை கண்டுவருகின்றார்கள்.

இவ் இக்கட்டான சூழ்நிலையில் நீங்கள் மனம்தளரலாகாது. நாட்டின் தற்போதைய நிலை உங்களின் கல்வி நோக்கிய சிந்தனையில் எத்தகைய குழப்பத்தையும் ஏற்படுத்திவிடக்கூடாது. எனவே உங்கள் கற்றலை இடைவிடாது தொடர்ந்திட வேண்டும் என ஆசிரியர் சங்கம் கேட்டுக்கொள்கின்றது.

மேலும் தங்களது கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளில் அனைத்து ஆசிரியர்களும் ஏதோவொரு வகையில் தங்களுக்கு உதவிக்கொண்டிருப்பார்கள் எனவும் நம்பிக்கையளிக்கின்றோம். எதிர்காலம் மீண்டும் செழிப்படையும்.- என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *