அவசரகால விதிமுறைகளை அமைதியான போராட்டங்களுக்கு எதிராக பயன்படுத்தக்கூடாது! – ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் கண்டனம்

மேலும் வன்முறைகள் இடம்பெறுவதை இலங்கை அதிகாரிகள் தடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர், பொதுமக்களின் துயரங்களிற்கு தீர்வை காண்பதற்காக ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளுமாறும் பொறுமையை கடைப்பிடிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொழும்பில் நேற்று பிரதமரின் ஆதரவாளர்கள் அமைதியாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டதை தொடர்ந்து, தீவிரமடைந்துள்ள வன்முறை குறித்தும் அதன் பின்னர் ஆளும்கட்சி அரசியல்வாதி மீது வன்முறை கும்பல் மேற்கொண்ட தாக்குதல் குறித்தும் ஆழ்ந்த கவலையடைந்துள்ளேன் என மிச்சலே பச்செலெட் தெரிவித்துள்ளார்.

வன்முறைகளை கண்டிப்பதுடன், அனைத்து தாக்குதல்கள் குறித்து சுயாதீன முழுமையான வெளிப்படையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை கேட்டுக்கொள்கின்றேன்.

வன்முறைகளிற்கு காரணமானவர்கள் அதனை தூண்டியவர்கள் என கண்டுபிடிக்கப்பட்டவர்கள் பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தப்படுவது மிகவும் முக்கியம்.

அதிகாரிகள் மேலும் வன்முறைகள் இடம்பெறுவதை தடுக்கவேண்டும். அமைதியாக ஒன்றுகூடலிற்கான உரிமையை பாதுகாக்கவேண்டும்.

பாதுகாப்பு படையினருக்கு உதவியாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இராணுவத்தினர் உட்பட அதிகாரிகள் சட்டஅமுலாக்கல் நடவடிக்கையின் போது பொறுமையை கடைப்பிடிக்கவேண்டும், அவசரகால சூழ்நிலையில் பின்பற்றப்படும் நடவடிக்கைகள் சர்வதேச மனித தராதரத்திலானவையாக காணப்படுவதை உறுதி செய்யவேண்டும்.

அவசரகால விதிமுறைகளை அமைதியான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் இணங்கமறுப்பதற்கு எதிராக பயன்படுத்தக்கூடாது.

அரசாங்கத்திற்கு வாழ்வதற்கான உரிமையை பாதுகாப்பதற்கான கடப்பாடும் தனியார்கள் அமைப்புகளின் வன்முறைகளில் இருந்து தனிநபர்களின் உயிர்களை பாதுகாக்கவேண்டிய கடப்பாடும் உள்ளது.

கடும் பொருளாதார நெருக்கடி பல இலங்கையர்களிற்கு நாளாந்த வாழ்க்கையை நெருக்கடி மிகுந்ததாக மாற்றியுள்ளது, தேசிய சம்பாசனைகள் மற்றும் ஆழமான கட்டமைப்பு மாற்றங்கள் தேவையாக உள்ள துயங்ரங்களை அது வெளிச்சமிட்டு காட்டியுள்ளது.

பொருளாதார நெருக்கடி அனைத்து இனங்களையும் மதங்களையும் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து அதிகளவு வெளிப்படைதன்மை பொறுப்புக்கூறல் மற்றும் ஜனநாயக வாழ்வில் பங்குபெற்றுதல் ஆகியவற்றிற்கான வேண்டுகோள்களை விடுக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னோக்கி செல்வதற்கான வழிவகையை கண்டறிவதற்காக இலங்கை அரசாங்கத்தை அனைத்து சமூகத்தினருடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறும், சமூக பொருளாதார நெருக்கடிகளிற்கு தீர்வை காணுமாறும், குறிப்பாக பலவீனமான நிலையில் உள்ள வறிய மக்களின் பிரச்சினைகளிற்கு தீர்வை காணுமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.

நீண்டகால பாரபட்சத்திற்கு வழிவகுத்துள்ள மனித உரிமைகளை அலட்சியம் செய்துள்ள நிலைக்கு காரணமான பரந்துபட்ட அரசியல் அடிப்படை காரணங்களிற்கு தீர்வை காணுமாறு இலங்கை அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றேன்.

இலங்கை நிலவரத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் தொடர்ந்தும் உன்னிப்பாக அவதானிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *