
அமைதியாக இடம்பெற்ற மக்கள் போராட்டத்தில், ராஜபக்ஸ அரசாங்கம் காடயர்களை விட்டு, வன்முறையாக மாற்றி விட்டனர் என பன்மைத்துவத்திற்கான மக்கள் ஆட்சிக் குழுவின் பிரதிநிதி இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடாக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
காலிமுகத்திடலில் போட்டக்காரர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டும் கூடாரங்கள் எரிக்கப்பட்டும் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் மிகவும் கவலைக்குரியதாகும்.
இது 56ம் ஆண்டு மற்றும் 6 ம் ஆண்டு காலகட்டத்தில் தமிழ் அமைப்புக்கள் மேற்கொண்ட அமைதிப்போராட்டத்தினை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது. எனவே இந்த சம்பவத்தினை வன்மையாக கண்டிக்கின்றோம்.
இந்த சம்பவத்தின் பின்னர் போராட்டக்காரர்களால் மகிந்தவின் ஆதரவாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைகளையும் கடுமையாக கண்டிக்கின்றோம்.
காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் மிகத் தெளிவாகக் கூறியது, தாங்கள் இந்த போராட்டத்தினை சமாதானமாக நடாத்திக்கொண்டு வருகின்றோம் என்று.
அத்துடன் யாரும் வன்முறைக்கு இறங்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். அதை மதித்து வன்முறையில் ஈடுபடாமல் அமைதியான முறையில் இந்தப் போராட்டத்தினை மேற்கொள்ள வேண்டும்.
வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கான தண்டனையினை சட்டரீதியாக வழங்க வேண்டும். மக்கள் சட்டத்தினை கையில் எடுப்பதனை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இந்த போராட்டம் நடைபெறும்போது அரசாங்கம் இன மத வர்க்க ரீதியில் மக்களை அடக்க முற்படுவதனையும் காணக்கூடியதாகவுள்ளது.
போராட்டத்திற்கு எதிராக அனுப்பட்டுள்ள காடையர்கள் மிகவும் வறிய குடும்பங்களிலிருந்த அனுப்பப்பட்டுள்ளனர். நாட்டில் மிகவும் மோசமான பொருளாதார நிலை நிலவுகின்ற வேளையில், இவ்வாறான செயற்பாடுகளையும் வன்மையாக கண்டிக்கின்றோம். தற்போது நடைபெறும் இந்த போராட்டங்களினால் தமிழ்பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டும் என்று இல்லை.
இருந்தபோதும் காணாமல் ஆக்கப்பட்டவர்களினது பிரச்சினைகள் எங்களுடைய ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்மை, கொல்லப்பட்டமை போன்ற பிரச்சினைகள், இனவாதம் பயன்படுத்தப்படுவது மற்றும் சர்வதேச ரீதியிலான தீர்வனைக் காண்பதற்கும் அழுத்தங்களுக்கும் பொறுப்புக் கூறுவதற்கான நிலைப்பாட்டினை இந்த போராட்டம் அமைத்துள்ளது.
ஆகவே இளைஞர்களுடைய இந்த போராட்டத்திற்கு ஆதரவினை வழங்குகிறோம். இவர்களின் போராட்டத்திற்கு எதிரான வன்முறையினை வன்மையாக கண்டிக்கின்றோம்.- என்றார்.