காணாமலாக்கப்பட்டவர்களுடைய உறவுகளாகிய எங்களது கண்ணீரும், வேதனையும் ராஜபக்சக்களை அழிக்கும்! – அனந்தி சசிதரன்

முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வை உரிமை கோருவதற்கு சண்டை பிடிப்பதை விடுத்து, இறந்தவர்களுக்கு மனதார அஞ்சலி செலுத்துவதற்கு அனைவரும் முன்வர வேண்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

சமூகம் மீடியாவுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவு என்பது ஒட்டு மொத்த உலகத்தமிழர்காலும் அனுஸ்டிக்கப்பட வேண்டிய ஒரு நிகழ்வு. ஏனென்றால் தமிழ் மக்கள் மீது ஒட்டு மொத்தமாக கட்டவிழ்த்துவிடப்பட்ட இன அழிப்பு. ஆகவே நான் நீ என்று உரிமை கோராமல் அனைவரும் உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பதற்கு முள்ளிவாய்க்கால் நினைவிடத்திலே எல்லோரும் ஒன்று கூட வேண்டும்.

ஒன்று கூட முடியாதவர்கள் தங்களது இருப்பிடங்களில் இருந்து அனுஸ்டிக்க வேண்டும். யாரோ ஒரு இனம் அழிந்ததென்று இல்லாமல் உங்களுடைய உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள் இந்த இன அழிப்பு யுத்தத்தில் மரணித்திருக்கின்றார்கள் என்ற உணர்வில் இவற்றை கடைப்பிடிக்க வேண்டும்.

அவர்களுடைய ஆத்மா சாந்தியடையவும், நீதிக்காவும் நாம் தொடர்ந்து போராடுகிறோம் என்ற பெரிய செய்தியை உலகத்திற்கு தெரிவிப்பதற்காகவும் அனைவரும் முள்ளிவாய்க்காலை நோக்கி அணிதிரள வேண்டும்.

யாருமே வெற்றி கொள்ள முடியாத ஒரு அணியாக தங்களைக்காட்டிக்கொண்ட ராஜபக்க்ஷ குடும்பத்தினருக்கு 13 வருடங்கள் கடந்தாலும் கூட “அரசன் அன்று அறுக்கும் தெய்வம் நின்று அறுக்கும்” என்ற வகையில் இன்று நடந்து கொண்டிருப்பதை நாங்கள் அமைதியாக பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.

வினைவிதைத்தவன் வினையை அறுவடை செய்தேயாக வேண்டும். இன்னும் இருக்கு, ஏனெனில் ஒவ்வொரு பெண்களினுடைய கண்ணீரும் சரணடைந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளாகிய எங்களது கண்ணீரும் வேதனையும் என்றோ ஒருநாள் இவர்களை அழிக்கும்.- என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *