கொழும்பு,மே 10
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளருடன் இன்று செவ்வாய்க்கிழமை விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி குறித்து யோசனை பெறுவதற்காக இந்த கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மிகவும் பாரதூரமானதாக உணரப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
“தற்போது நாட்டில் டொலர்களோ ரூபாய்களோ இல்லை, எதிர்காலத்தில் நாட்டை பொறுப்பேற்கும் எந்தவொரு தரப்பினருக்கும் இலங்கையை மீட்டெடுப்பது மிகவும் கடினமானதொரு சவாலாக இருக்கும்” என்று அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி ஹர்ஷ டி சில்வா, எரான் விக்கிரமசிங்க, கபீர் ஹாசிம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
