கொரோனா பரவல்: சீன நகரத்தில் சுரங்க ரயில் சேவை முடக்கம்

பீஜிங்,மே 11

சீனாவின் பொருளாதார தலைநகரமான ஷாங்காய், இப்போது தனித்தீவு போல காட்சி அளிக்கிறது. 2.5 கோடி மக்கள் வாழ்கிற அந்த நகரில் கொரோனா பரவல் அதிகரித்ததால், பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. கடந்த மாத மத்தியில் தினமும் 26 ஆயிரம் பேர் வரையில் தொற்று பரவியது. இப்போது தொடர் கட்டுப்பாடுகள் காரணமாக தினசரி பாதிப்பு 3 ஆயிரம் அளவுக்கு குறைந்துள்ளது.

நேற்று முன்தினம் 3 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியானது. 6 பேர் தொற்றால் உயிரிழந்தும் உள்ளனர். கொரோனா தொற்று மேலும் பரவாமல் இருக்க, பாதிப்புக்குள்ளானோர் வீடுகளில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.

இதுபற்றி ஷாங்காய் நகர அதிகாரி ஜின் சென் கூறும்போது, “ஒரு வீட்டில் ஒரே கழிவறையை, சமையல் அறையை ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பகிர்கிற நிலையில், அவர்களில் வீடுகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்படும்” என தெரிவித்தார்.

அந்த நகரில் 2 சுரங்க ரெயில் பாதைகளில் மட்டும் ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இப்போது அதுவும் நேற்று முதல் நிறுத்தப்பட்டு விட்டது. முதல் முறையாக நகரின் ஒட்டுமொத்த சுரங்க ரெயில் சேவையும் மூடப்பட்டு விட்டது என்று அங்கிருந்து வரும் ஆன்லைன் ஊடக தகவல் கூறுகிறது. சமீப காலமாக கட்டுப்பாடுகளுடன்கூட பொதுமக்கள் சில மாவட்டங்களில் கடைகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது அவர்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இது மக்களை விரக்தியில் ஆழ்த்தி உள்ளது.

இதற்கிடையே தலைநகர் பீஜிங்கில் கொரோனா பரவி விடாமல் தடுக்க 3 நாட்கள் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது. நேற்று இந்த பரிசோதனை தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் இந்த நகரில் 74 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இங்கு தனிப்பட்ட கட்டிடங்கள், குடியிருப்பு வளாகங்கள் பூட்டப்பட்டுள்ளன. ஓட்டல்களுக்கு சென்று சாப்பிட அனுமதி இல்லை. 60 சுரங்க ரெயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *