
கொழும்பு,மே 11
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளை ஒத்திவைப்பது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சார்த்துகளுக்கான அனுமதி அட்டைகள் தபால் இடப்பட்டுள்ள நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலில் தபால் திணைக்களம் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளது.
இதே நேரம் இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளும் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று, பரீட்சை ஏற்பாடுகள் தொடர்பாக மாகாண வலய ஒருங்கிணைப்பாளர்களை அறிவுறுத்தும் கூட்டம் zoom ஊடாக நடைபெற்றது.
இதற்கமைய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளை திட்டமிட்டபடி மே 23 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
எனினும் நாட்டின் தற்போதைய சூழலில் பரீட்சை நடாத்துவதில் பல சிக்கல்கள் அவதானிக்கப்பட்டுள்ளதை அடுத்து பரீட்சையை திட்டமிட்ட திகதியில் நடாத்துவதா அல்லது மீண்டும் பிற்போடுவதா என்பது தொடர்பாக பரீட்சைத் திணைக்களம், அல்லது கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிக்கும் வரை காத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

