ஏறாவூரில் நகைக்கடை உடைத்து திருட்டு! – பொலிஸார் விசாரணை

மட்டக்களப்பு – ஏறாவூர் 4ஆம் குறிச்சி பிரதான வீதியை அண்டி அமைந்துள்ள நகைத் தொழிலகம் உடைத்துத் திருடப்பட்டுள்ளமை தொடர்பில் ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர் ஆத்ம பரணீதரன் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு இன்றையதினம் சென்ற ஏறாவூர் பொலிஸாரும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரும் சோகோ பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

உடனடியாக விசாரணை மேற்கொண்டதில் 2.5 கிராம் நகை திருட்டுப் போயிருப்பது தெரிய வந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உறவினர் ஒருவர் மரணித்ததனால் இந்த நகைத் தொழிலகம் கடந்த எட்டு நாட்களாக பூட்டப்பட்ட நிலையில் இருந்ததாகவும் எட்டு நாட்கள் கழித்து புதன்கிழமை வந்து கடையைத் திறந்தபோது கடை பூட்டு உடைத்து திருடப்பட்டிருப்பது தெரியவந்ததாக கடை உரிமையாளர் மேலும் கூறியுள்ளார்.

இந்த நகைத் தொழிலகத்திற்கு அருகிலுள்ள மற்றொரு நகைக்கடை கடந்த 2ஆம் திகதி பூட்டு உடைக்கப்பட்டு அங்கிருந்த ஏ.ரி.எம்.வங்கி அட்டை உட்பட இன்னும் சில பொருட்கள் திருடப்பட்டிருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இச்சம்பவங்கள் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *