நாட்டில் ஏற்பட்டுள்ள வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்தால், இராணுவ ஆட்சி அமுல்படுத்தப்படும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க எச்சரித்துள்ளார்.
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக அலரிமாளிகைக்கு அருகாமையிலும், கொழும்பு காலிமுகத்திடலிலும் அமைதியான முறையில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் மீது அரசாங்க ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தினர்.
இதனையடுத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் மற்றும் அரசாங்கத்துடன் தொடர்புடையவர்களின் வாகனங்கள் மற்றும் வீடுகள் பொதுமக்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தனது ருவிற்றரில், “நீதி மற்றும் ஜனநாயக ஆட்சிக்காக மிகவும் அமைதியான முறையில் போராட்டத்தை நடத்திய குடிமக்கள் அனைவரிடமும், இராணுவ ஆட்சிக்கு வழி வகுக்கும் வகையில் வன்முறைகளில் ஈடுபட வேண்டாம் என்பதைக் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.