
சிறையில் உள்ள கைதிகளுக்கு ஒருவகை காய்ச்சல் பரவி வருவதாக குரல் அற்றவர்கள் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
நாட்டில் தற்போது அசாதாரணமான நிலை காணப்படுகின்றது. இதனால் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் அதன் பாதிப்புக்களை அனுபவித்து கொண்டிருக்கிறார்கள்.
புதிய மெகசின் சிறைச்சாலையில் ஒரு வகையான வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டு அரசியல் கைதிகள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
அவர்களின் உள்ள வைத்திய செயற்பாட்டிற்கு கூட மருந்துகள் போதாமல் உள்ளது.
அதாவது காய்ச்சலுக்கு தேவையான சாதாரண பனடோல் கூட இல்லாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டு உள்ளனர்.
இதனை அரசியல் கைதிகளின் பெற்றோர் குரல் அற்றவர்கள் குரல் அமைப்பிற்கு தெரியப்படுத்தி கவலை வெளியிட்டனர்.
எனவே இந்த பொருளாதார தாக்கத்தில் நேரடியாக பாதிக்கப்பட்ட எங்களுடைய தமிழ் அரசியல் கைதிகளுக்கு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வேண்டுகோளாக கேட்கிறோம்.
தமிழ் அரசியல் கைதிகளின் நோய்க்கு தீர்வு காணும் முகமாக, சிறைச்சாலை ஆணையாளர் , அரசாங்கம் மற்றும் இலங்கையில் உள்ள சர்வதேச தொண்டு நிறுவனங்கள் இதில் கவனம் எடுக்க வேண்டும்.
மேலும் பொருளாதார நெருக்கடி காரணமாக உடல் மற்றும் மன நலம் பாதிக்கப்பட்டவர்களாக பலர் காணப்படுகின்றனர்.
அவர்களின் உணவு வழமையை விட மோசமாக காணப்படுகிறது என அறியக் கிடைத்திருக்கிறது.
இந்தச் சந்தர்ப்பத்திலாவது ஒட்டுமொத்த அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பது எமது பணிவான வேண்டுகோளாக முன்வைக்கிறோம் என்றார்.