
கொழும்பு, மே 12
முப்படையினர் களமிறக்கப்பட்டு வீதித்தடைகள் ஏற்படுத்தி பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதால், அநாவசியமான முறையில் பொதுமக்கள் எவரும் வீதிகளில் நடமாட வேண்டாமெனவும், வன்முறைகளில் ஈடுபடுவோரை எந்தவொரு வழியிலும் கட்டுப்படுத்த பொலிஸாரும் முப்படையினரும் தயாராக உள்ளதாகவும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களை இராணுவத்தினர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாகவும், இதனைப் பார்த்து எவரும் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவதற்கு இடமளிக்க முடியாது. முப்படையினரும் வீதித்தடைகளை அமைத்துள்ளனர். அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் செல்வதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது. அநாவசியமான முறையில் வீதிகளில் நடமாட வேண்டாம். எமது கடமைகளுக்கும் இடையூறுகளை ஏற்படுத்த வேண்டாம் எனவும் தெரிவித்தார்.
அமைதியான போராட்டங்கள் தற்போது வன்முறையாக மாறியிருப்பதாக தெரிவிக்கும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, வன்முறைகளில் ஈடுபடுவோரை எந்தவொரு வழியிலும் கட்டுப்படுத்த பொலிஸாரும் முப்படையினரும் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவத்த அவர், 09, 10ஆம் திகதிகளில் நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை அமைதியான முறையில் தீர்ப்பதற்கு நாம் முயற்சித்திருந்தோம். எனினும் தற்போது அமைதியான முறை சீர்குழைக்கப்பட்டு வன்முறைச் சம்பங்கள் அரங்கேற்றப்படுகின்றன எனவும் தெரிவித்தார்.