அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நாடளாவிய ரீதியில் அரச எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் காலிமுகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலகம் முன்னால் நடைபெற்றுவரும் தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் இன்று 35வது நாளை எட்டியுள்ளது.
இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்ட களமான கோட்டா கோ கமக்குள் புகுந்த வன்முறையாளர்களால் ஆர்ப்பாட்ட கூடாரங்கள் அடித்து நொருக்கி தீவைக்கப்பட்டது.
இவ்வாறான நிலையில் கோட்டா கோ கமவில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தை நினைவு படுத்தும் வகையில் ‘போராட்டத்தின் நினைவுச்சின்னம்’ ஒன்று இன்றைய தினம் கோட்டா கோ கம வளாகத்தில் அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.
குறித்த நினைவுச் சின்னத்தில் அரச அடக்குமுறை மற்றும் கண்ணீர் புகைக்குண்டு சாமானிய மக்களின் தேய்ந்து போன செருப்புகளை மிதித்தது போல உருவகப்படுத்தப்பட்டதாக குறித்த நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.


