நாட்டில் பொருளாதார நெருக்கடி சூழ்நிலை காணப்பட்டாலும் மட்டக்களப்பு மாநகரசபையில் உள்ள நிதியைக் கொண்டு அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத வகையில் சில அதிகாரிகளின் செயற்பாடுகள் உள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகரசபையின் 60வது அமர்வு இன்று காலை மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் ஆரம்பமானது.
மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,ஆணையாளர் மதிவண்ணன்,பிரதி ஆணையாளர் சிவராஜா ஆகியோரின் பங்குபற்றுதலுடனும் மாநகரசபை உறுப்பினர்களின் பிரசன்னத்துடனும் இன்றைய சபை அமர்வு வழமையான சம்பிரதாயங்களுடன் ஆரம்பமானது.
இதன்போது சபையினை ஆரம்பித்து மாநகரசபை முதல்வர் தலைமையுரையினையாற்றியதை தொடர்ந்து மாநகரசபை உறுப்பினர்கள் சில விடயங்களை சுட்டிக்காட்டியிருந்தனர்.
குறிப்பாக கடந்த காலத்தில் மட்டக்களப்பில் தகனம் எரிக்கும் இயந்திரம் பொருத்துவதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டிருந்த போதிலும் அதனை நிறைவேற்ற நிர்வாகம் முயற்சி செய்யவில்லையென்றும் தற்போதைய பொறியியலாளர் அது தொடர்பில் அக்கரையற்று செயற்படுவதாகவும் இங்கு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
தொடர்ச்சியாக மக்களின் வாழ்வாதாரம் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் நிதிகள் ஒதுக்கீடுகள் செய்யப்படுகின்றபோதிலும் அவற்றினை நடைமுறைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கையெடுக்காமை தொடர்பில் மக்களின் பிரதிநிதிகளிடமே கேள்வியெழுப்புவதாகவும்
மாநகரசபையின் நிர்வாகத்தின் செயற்பாடுகள்தான் இவ்வாறான பின்னடைவுக்கு காரணம் என்பதை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டிய நிலையுள்ளதாகவும் மாநகரசபை உறுப்பினர் து.மதன் தெரிவித்தார்.
மாநகரசபையின் செயற்பாடுகள் பின்தள்ளப்படுவதற்கு காரணமானவர்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதுடன் அவர்கள் கடமைகள் தவறும்பட்சத்தில் அவர்களுக்கு பதிலீடுகளாகவுள்ளவர்களைக் கொண்டு மாநகரசபையின் அபிவிருத்தி செயற்பாடுகளை முன்கொண்டு செல்லவேண்டும் என இங்கு கருத்து தெரிவித்த மாநகரசபை உறுப்பினர் ஜோர்ஜ்பிள்ளை தெரிவித்தார்.
இது தொடர்பில் பல்வேறு கருத்துகள் மாநகரசபை உறுப்பினர்களினால்முன்வைக்கப்பட்டதுடன் தொடர்ந்து மாநகரசபை அமர்வு முன்கொண்டு செல்லப்பட்டதுடன் பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது.

