மாவீரர்களின் தியாகம் வீண் போகவில்லை! கஜேந்திரன் எம்.பி

சிங்கள அரசு மேற்கொண்ட இன அழிப்பு சுவடுகளை, எமது எதிர்கால சந்ததியினர் தெரிந்துகொள்ளும் வரை ஆண்டுதோறும் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை கொண்டாட வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் வார ஆரம்ப நாளான இன்று, நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபன் நினைவு இடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு இனப் படுகொலையை அரங்கேற்றி 13 ஆண்டுகள் கடக்கின்றது.

2009 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் திகதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு தமிழ் மக்கள் மீது முள்ளிவாய்க்காலில் இனப் படுகொலையை அரங்கேறி இருந்ததது.

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவும் அவரது சகோதரர் கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளர் ஆகவும் இருந்து அந்த இனப் படுகொலை அன்று அரங்கேற்றப்பட்டது.

இன்றிலிருந்து வருகின்ற 18 ஆம் திகதி வரையில் இனப் படுகொலை வாரம் நடைபெறுகின்றது.

இன்று இனப் படுகொலை வாரம் ஆரம்பிக்கின்றது. 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற இருக்கிறது.

இந்த வேளையில் நாங்கள் நல்லூர் பின் வீதியில் தியாகதீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக இந்த காட்சிப்படுத்தல் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.

எங்கள் இனத்தின் மீது சிங்கள, பௌத்த ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக மேற்கொண்ட இனப் படுகொலை வரலாற்றை எதிர்கால சந்ததிக்கு கொண்டு செல்லும் முகமாக சில காட்சிப்படுத்தல் பதாதைகளை தொங்க விட்டு இந்த நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

இந்த படுகொலைக்கு நீதி வேண்டி தொடர்ந்தும் போராட வேண்டும். மஹிந்த ராஜபக்ஷ சகோதரர் கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட இலங்கையினுடைய ஆட்சியாளர்கள் ச‌ர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு அவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும்.

அவர்கள் தண்டிக்கப் பட வேண்டும் என்பதும் தமிழ் மக்களின் போராட்டத்தின் மிக முக்கிய கருத்தாகும்.

இந்த விடுதலை பயணத்தில் உயிர் நீத்த இந்த ஆன்மாக்கள் இந்த மாவீரர் உடைய தியாகங்கள் வீண்போகவில்லை என்பதை நாங்கள் இன்று நடைபெற்று கொண்டிருக்கும் சம்பவங்கள் மூலம் தெரியவருகின்றது.

எங்கள் மீது இனப் படுகொலை செய்த ராஜபக்சே சொந்த மக்களாலே ஒரு துரோகி என்றும் கள்ளன் என்றும் கொலைகாரன் என்றும் குற்றம் சாட்டப்பட்டு பதவியில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட சம்பவம் கண் முன்னாலேயே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கோட்டாபய ராஜபக்சவும் பதவியில் இருந்து விலக வேண்டும் என்பது எங்களுடைய விருப்பம் .

தமிழ் மக்கள் ஒன்றையாட்சிக்குட்பட்ட 13 ஆவது திருத்த சட்ட சதி முயற்சியில் இருந்து வெளியே வந்து ஒற்றையாட்சியை நிராகரித்து தமிழ் தேசம் ஒன்றுபட தீர்வுக்காக ஒன்றுபட வேண்டும்.

இந்த சூழ்நிலையை பயன்படுத்தி ஒரு சர்வதேச நீதி ஒன்றை பேற வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *